வணங்காமண்-சென்னைக்குள் நுழைய அனுமதி
ஐரோப்பிய வாழ் தமிழர்கள் கேப்டன் அலி என்ற கப்பலுக்கு வணங்காமண் என பெயர் சூட்டி சுமார் 884 டன் எடை கொண்ட நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தனர்.
கடந்த மாதம் 4ம் தேதி இலங்கை வந்த அந்த கப்பலில் ஆயுதங்கள் இருக்கலாம் என கூறி இலங்கை அரசு அங்கிருந்து வெளியேற்றியது. இதையடுத்து சென்னை நோக்கி வந்த கப்பலுக்கு இந்திய கப்பற்படையும் சோதனை கொடுத்தது. அந்த கப்பலை சென்னை துறைமுகத்துக்கு வெளியே நடுக்கடலில் நிறுத்தி வைத்தது.
இதையடுத்து வணங்காமண் கப்பலை சென்னைக்கு துறைமுகத்துக்கு கொண்டு வர அனுமதி வேண்டும் என தமிழக முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட பலரும் வலியுறுத்தினர்.
இந்நிலையில் மனிதாபிமான நடவடிக்கையாக இந்த கப்பலை சென்னை துறைமுகத்துக்கு வர அனுமதி அளிப்பதாக மத்திய கப்பல்துறை போக்குவரத்து அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவி்த்துள்ளார்.
இதை தொடர்ந்து சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் கேப்டன் சுபாஷ் குமார் கூறுகையில்,
வணங்காமண் கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வர அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதை நான்காவது தளத்தில் நிறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த கப்பல் இங்கு வந்தவுடன் அதில் இருக்கும் பொருட்களை உள்ளூர் போலீசாரும், கப்பற்படையும் சோதனையிடுவார்கள்.
அதன் பின்னர் இந்த பொருட்கள் வேறொரு கப்பல் மூலம் இன்னும் நான்கு நாட்களில் கொழும்பு அனுப்பி வைக்கப்படும் என்றார் சுபாஷ் குமார்.
அங்கிருந்து செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இந்த நிவாரணப் பொருட்கள் தமிழர்களுக்கு வினியோகிக்கப்படும்.