மெரீனாவில் குளிக்க-'கடலை போட' தடை!!
அதேபோல கடற்கரையில் உட்கார்ந்து கொண்டு செக்ஸ் சில்மிஷங்களில் ஈடுபடுவது, உம்மா கொடுத்துக் கொள்வது ஆகியவையும் கூடவே கூடாது என்று போலீஸார் கூறியுள்ளனர். பிக்பாக்கெட்களின் அட்டகாசத்தை ஒடுக்கவும் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அழகிய கூந்தல் போல நீண்டு விரிந்து கிடக்கும் மெரீனா கடற்கரையை மாசுபடுத்தி, பாழ்படுத்திப் பார்ப்பதில் நம்மவர்களை மிஞ்ச வேறு யாராலும் முடியாது.
கையில் கொண்டு வருவதை அப்படியே சாப்பிட்டு விட்டு போட்டு விட்டுப் போவது, கடற்கரையிலேயே காதல் களியாட்டத்தில் ஈடுபடுவது என நாறடித்து வருகிறார்கள்.
இதுபோக ஈவ் டீசிங் தொல்லை, பிக்பாக்கெட்களின் தொல்லை, வழிப்பறி என ஏகப்பட்ட இடையூறுகள் வேறு.
இது போதாதென்று கடலுக்குள் போய் குளித்து சாகசம் செய்யப் போவதாக கூறி பல பேர் உயிரிழந்த பரிதாபமும் அவ்வப்போது நடைபெறுகிறது.
இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் இப்போது போலீஸார் பெரிய புல்ஸ்டாப் வைக்கவுள்ளனர்.
கண்காணிப்பு கோபுரம்...
கடற்கரையில் 4 இடங்களில் உயரமான கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படுகிறது. அதில் நின்று போலீசார் பைனாகுலர் மூலம் கடற்கரைக்கு வந்து செல்வதை கண்காணிப்பார்கள்.
கடலில் அத்து மீறி குளிப்பவர்கள் குறித்த தகவல்களை வயர்லெஸ் மூலம் குதிரை படை போலீசுக்கும், கடற்கரை ரோந்து பணி போலீசுக்கும் தகவல் தெரிவித்து உடனடி நடவடிக்கை எடுப்பர்.
பிக்பாக்கெட் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ஆசாமிகளை அடையாளம் கண்டு தெரிவிப்பார்கள்.
கடற்கரையை பெட்ரூமாக்கி அசிங்கமாக நடந்து கொள்ளும் காதல் ஜோடிகளும் அங்கிருந்து வெளியேற்றப்படுவர்.
தற்போது கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதேபோல எலியாட்ஸ் பீச்சிலும் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்படுகிறதாம்.
இதுகுறித்து கமிஷனர் ராஜேந்திரன் கூறுகையில்,
பொது மக்களின் பாதுகாப்பு கருதி கடல் பகுதியை ஒட்டி கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படுகிறது. ஒவ்வொன்றும் ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது என்றார்.