ரூ. 7500 லஞ்சம் வாங்கிய வாங்கிய மின்வாரிய அலுவலர் கைது
நெல்லை: நெல்லையில் மின் இணைப்பு தருவதற்கு ரூ. 7500 லஞ்சம் வாங்கிய மின் வாரிய உதவியாளர் கைது செய்யப்பட்டார்.
பாளையை சேர்ந்தவர் கோமதி நாயகம். இவர் டக்கரம்மாள்புரம் அருகே உள்ள மீட்பர் நகரில் புதிதாக வீடு கட்டுகிறார். இதற்கு மின் இணைப்பு கேட்டு பெருமாள்புரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
இதையடுத்து வீட்டை பார்வையிட சென்ற மின்வாரிய இளநிலை உதவி பொறியாளர் சிவகுமார், வணிக பிரிவு உதவியாளர் உதயகுமார் ஆகியோர் சென்றனர்.
அவர்கள் இருவரும் கோமதி நாயகத்திடம் மின் இணைப்புக்கு ரூ.9 ஆயிரம் லஞ்சம் கேட்டனர். அவர்களிடம் பேரம் பேசி ரூ.7,500 தருவதாக கோமதி நாயகம் ஒப்புக் கொண்டார். பின்னர் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
அவர்கள் ஆலோசனையின் பேரில் நேற்று மாலை பெருமாள்புரம் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றார்.
அங்கு உதயகுமார் மட்டுமே இருந்ததால் அவரிடம் பணத்தை கொடுத்தார்.
அப்போது அலுவலகத்திற்கு வெளியே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி மனோகர குமார் தலைமையில் போலீசார் உதயகுமாரை கையும் களவுமாக பிடித்து லஞ்சபணத்தை கைப்பற்றினர். அவரிடம் கணக்கில் இல்லாத ரூ.6,500யும் பறிமுதல் செய்தனர்.
மேலும் ஆச்சிமடத்தில் உள்ள அவரது வீட்டில் சோதனை போட்டனர். வீட்டு மின் இணைப்புக்கு லஞ்சம் கேட்ட உதவி பொறியாளர் சிவகுமாரை தேடி வருகின்றனர்.