என்எல்சி ஊழியர் ஸ்டிரைக் முறையற்றது-வீராசாமி
சென்னை: நெய்வேலி மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது முறையல்ல என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
சட்டசபையில் இன்று நெய்வேலி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதற்கு பதிலளித்து வீராசாமி கூறுகையில்,
என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் பற்றி இந்த மன்றத்தில் பேச நமக்கு உரிமை இல்லை. நெய்வேலியில் 2,490 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. இதில் 1,127 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டுக்கு கிடைக்கிறது. இந்த மின்சாரம் நின்று போய் விடக்கூடாதே என்பதற்காகத்தான் மத்திய நிலக்கரித்துறை அமைச்சரைச் சந்தித்து ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கையை நிறைவேற்ற நான் முயற்சி எடுத்தேன்.
ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆனாலும் தொழிலாளர்களை மதிக்கும் அரசாக திமுக அரசு இருக்கிறது.
எனவேதான் 1997ல் திமுக ஆட்சிக்கு வந்தபோது 10,000 அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்களும் 2006ல் ஆட்சிக்கு வந்த பிறகு 21,600 மின் வினியோக ஒப்பந்த தொழிலாளர்களும் பணி நிரந்தரம் செய்யப்பட்டார்கள்.
அதே போல என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களின் நலனைக் காப்பதற்காக நானே டெல்லி சென்று நிலக்கரித்துறை அமைச்சரை சந்தித்துப் பேசி பிரச்சனையைத் தீர்க்க முயற்சி எடுத்தேன். அதற்கு வெற்றியும் கிடைத்தது. அப்போது 4 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியும் அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டு தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பினார்கள். தொழிலாளர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
என்றாலும் தொழிலாளர்கள் பணி மூப்பு அடிப்படையில் பட்டியல் தயாரிப்பதில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் தகுந்த காரணமில்லாமல் சிலர் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். ஒரு தொழிற்சங்கம் இரண்டாகப் பிரிந்து சுமார் 250 பேர் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்தத் தகவல் அறிந்ததும் முதல்வர் என்னிடம் அதைப்பற்றி கேட்டார்.
வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபடச் சொன்னார்ய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்தை அனுப்பி வைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தவும் உத்தரவிட்டார்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு கைதான 250 ஊழியர்களை உடனே விடுதலை செய்யவும் உத்தரவிட்டார்.
தொழிலாளர்கள் மீது இந்த அரசு இவ்வளவு பரிவுடன் நடந்து கொண்ட பிறகும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது முறையல்ல. நிலம் கொடுத்தவர்களுக்கு அதிக பணம், வீட்டுக்கு ஒருவருக்கு வேலை என்று இன்னும் சில பிரச்சினைகளையும் கிளப்புகிறார்கள்.
நிலம் கொடுத்தவர்களுக்கு ஏற்கனவே ஏக்கர் ஒன்றுக்கு ரூ.5 லட்சம் என்று அவர்கள் ஒப்புக் கொண்ட பணம் கொடுக்கப்பட்டு விட்டது.
இந் நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது முறையல்ல.
நெய்வேலியில் மின் உற்பத்தி பாதித்தால் தமிழ்நாட்டில் 1100 மெகாவாட் அளவுக்கு மின் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகும். எனவே அப்படி ஒரு நிலையை உருவாக்கும் வகையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்காக டெல்லி சென்று மின்துறை அமைச்சரை சந்தித்து பேசி சமூக தீர்வு ஏற்பட நான் தேவையான முயற்சிகளை செய்யத் தாராக இருக்கிறேன். எனவே வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் என்றார் ஆற்காடு வீராசாமி.
ஆனால் அமைச்சரின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி இநதிய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏக்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.