மாமனாரை குத்தி கொன்ற மருமகன் தலைமறைவு
தாம்பரம்: தாம்பரம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மாமனாரை கத்தியால் குத்தி கொன்ற மருமகனை போலீசார் தேடி வருகின்றனர்.
தாம்பரத்தை சேர்ந்த கடப்பேரி தெருவில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த ராமசாமி (64) என்பவரின் மகள் மாலா என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்த நாளிலிருந்து கிருஷ்ணமூர்த்தி மாமனார் வீட்டில் வீட்டோடு மாப்பிள்ளையாக தங்கிவிட்டார். வேலைக்கு ஒழுங்காக செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் சண்டை போட்டு வந்துள்ளார்.
பதிலுக்கு மாலாவும், அவரை கடுமையாக பேசியுள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 14ம் தேதி கணவன், மனைவிக்குள் மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. மகளும், மருமகனும் சண்டை போடுவதை பார்த்த ராமசாமி கோபம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் மகளின் வாழ்க்கையை நினைத்து அமைதியாக இருந்துள்ளார்.
இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தியின் கோபம் மெல்ல மாலாவின் வீட்டு பக்கம் திரும்பி, அமைதியாக நின்று கொண்டிருந்த ராமசாமியிடம் விவாதம் செய்துள்ளார். மேலும், ஆத்திரமடைந்த அவர் உன் மகள் என்னை திட்டுகிறாள். சண்டை போடுகிறாள். அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறாய் என கூறி காய்கறி நறுக்கும் கத்தியால் ராமசாமியை குத்தியுள்ளார்.
இதில் ராமசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் பெருக்கெடுத்தது. இதையடுத்து அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரது கிட்னியில் கத்தி ஆழமாக விழுந்துவிட்டது. இதனால் மேல் சிகிச்சைக்கு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்குமாறு கூறினர்.
சென்னை மருத்துவமனையில் டாக்டரிடம் கீழே விழுந்ததால் கல் குத்திவிட்டது என பொய்யான காரணத்தை கூறி, ராமசாமியை அனுமதித்துள்ளனர். இந்நிலையில் அவர் கடந்த 29ம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதையடுத்து அவருக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவர் கத்தியால் குத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாலாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாகிவிட்ட கிருஷ்ணமூர்த்தியை தேடி வருகின்றனர்.