ரூ. 6 கோடி நில மோசடி-சென்னையில் 3 பேர் கைது
சென்னை: சென்னையில் நடந்த இரு வேறு நில மோசடி சம்பவங்களில் போலி ஆவணம் மூலம் ரூ. 6 கோடி ஏமாற்றிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கொரட்டூரை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு சொந்தமாக அப்பகுதியில் ரூ. 5 கோடி மதிப்புள்ள நிலம் ஒன்று உள்ளது.
இந்நிலையில் லிங்கமூர்த்தி, ரங்கநாதன் என்ற இருவர் அவரது நிலம் தங்களுக்கு சொந்தமானது எனக்கூறி ரூ. 5 கோடிக்கு விற்பனை செய்து, மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து நிலத்தின் சொந்தக்காரர் கணேசன் கொடுத்த புகாரை அடுத்து போலீசார் லிங்கமூர்த்தி, ராமநாதன் இருவரையும் கைது செய்தனர்.
மற்றொரு சம்பவத்தில் தி.நகர் பிரகாசம் தெருவை சேர்ந்த ஹேமந்த்குமார்ரெட்டி என்பவர் சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகாரில்,
எனக்கு சொந்த பாலவாக்கத்திலும், எனது சகோதரி டாக்டர் நிர்மலாவுக்கு சொந்தமாக எம்.கே.பி நகரிலும் நிலம் இருக்கிறது. இவற்றை அபகரிக்க வேண்டும் என்ற நோக்க்ததுடன் சிலர் ஆள் மாறாட்டம் செய்துள்ளனர்.
போலி பத்திரங்களை தயாரித்து ரூ. 1 கோடி மதிப்பிலான நிலங்களை விற்றுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அய்யப்பன்தாங்கல் சீனிவாசபுரத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் (34) என்பவரை கைது செய்தனர். அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.