டிவி ஊழல்-ஜெவுக்கு எதிரான அப்பீல் மனு விசாரணை
சென்னை: அதிமுக ஆட்சியில் பஞ்சாயத்துகளுக்கு இலவச கலர் டி.விக்கள் வழங்கியதில் நடந்த ஊழல் தொடர்பாக ஜெயலலிதாவுக்கு எதிரான அப்பீல் வழக்கு உயர் நீதிமன்றத்தில் விரைவில் மீண்டும் விசாரிக்கப்படவுள்ளது.
ஜெயலலிதா முதன்முறையாக முதல்வராக இருந்தபோது கிராம பஞ்சாயத்துகளுக்கு இலவச கலர் டி.வி. வாங்கியதில் ரூ. 10.16 கோடி ஊழல் நடந்தது தொடர்பாக, அடுத்து 1996ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த திமுக அரசு வழக்குத் தொடரப்பட்டது.
சிபிசிஐடி விசாரித்த இந்த வழக்கில் ஜெயலலிதா, பாஸ்கரன், முன்னாள் அமைச்சர்கள் சத்தியமூர்த்தி, செல்வகணபதி, தலைமைச் செயலாளர் ஹரிபாஸ்கர், ஊராட்சித்துறைச் செயலாளர் எச்.எம்.பாண்டே உள்பட 10 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிமன்றம் ஜெயலலிதா, பாஸ்கரன் உள்ளிட்ட சிலரை விடுவித்தது. ஆனால், செல்வகணபதி, ஹரிபாஸ்கர், எச்.எம். பாண்டே உள்ளிட்டோருக்கு 5 வருட சிறை தண்டனை வழங்கியது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து செல்வகணபதி, ஹரிபாஸ்கர், எச்.எம். பாண்டே ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்தனர்.
அதே போல ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசும் அப்பீல் மனு தாக்கல் செய்தது. இந்த அப்பீல் மனுக்கள் மீதான வழக்கு விசாரணை கடந்த 9 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது.
இந் நிலையில் இன்று காலை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயபால் முன், ஹரிபாஸ்கர், பாண்டே ஆகியோர் தொடர்ந்த அப்பீல் வழக்குகள் இறுதி விசாரணைக்கு வந்தன.
ஆனால் தமிழக அரசு ஜெயலலிதா மீது தொடர்ந்த அப்பீல் வழக்கு விசாரணைக்கு வரவில்லை. அப்போது ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்கலாம் என்றார்.
இதையடுத்து நீதிபதி ஜெயபால், ஜெயலலிதாவுக்கு எதிரான மீதான அப்பீல் வழக்கையும் விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்குகளின் இறுதி விசாரணைக்கான தேதி வரும் 6ம் தேதி முடிவு செய்யப்படும் என்றும் அறிவித்தார்.