இதெல்லாம் ஒரு பட்ஜெட்டா?: லாலு தாக்கு
டெல்லி: எனது பதவிக் காலத்தில் ரயில்வே இலாகாவின் செயல்பாடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப் போவதாக ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி கூறியிருப்பது பற்றி கவலையில்லை என்று முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், ரயில்வே இலாகாவின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவதால் எனக்கு எந்த வித சங்கடமும் கிடையாது. முதலில் அவர் வெள்ளை அறிக்கையை கொண்டு வரட்டும்.
மம்தாவின் ரயில்வே பட்ஜெட்டில் பிகார் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இது அவசர கோலத்தில் தயாரிக்கப்பட்ட பட்ஜெட். இதில், அறிவிக்கப்பட்டுள்ள கவர்ச்சிகர திட்டங்கள் நடைமுறைக்கு சாத்தியப்படாதவை. ரயில் கட்டணத்தை குறைத்திருக்க வேண்டும்.
எனது காலத்தில் ரயில்வே துறை லாபத்தில் இயங்கியது. ஆனால், மம்தா பானர்ஜி காலத்தில் அது லாபகரமாக இயங்கினால் ஆச்சரியம் தான்.
இந்த பட்ஜெட்டில் புதிதாக எதுவும் கிடையாது. அவர் வாசித்தது எல்லாம் எனது பதவி காலத்தில் நான் அறிவித்தவைதான். எனது சாதனைகளை பயன்படுத்தி அவர் பெயர் வாங்கப் பார்க்கிறார்.
இரட்டை அடுக்கு கொண்ட ரயில்களை இயக்கப்போவதாக மம்தா அறிவித்து இருக்கிறார். இந்திய ரயில் பாதைகள் பாலங்கள், குகைகள் ஆகியவற்றைக் கொண்டவை. அதில் எவ்வாறு இரட்டை அடுக்கு ரயில்களை இயக்க முடியும்?.
மாதாந்திர சீசன் டிக்கெட் 25 ரூபாய்க்கு வழங்குவதாக அறிவித்திருப்பதும் நடைமுறைக்கு ஒத்து வராது. வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் ஏழைகள் இந்த சீசன் டிக்கெட்டை பெறுவது கடினமாக இருக்கும் என்றார்.
லாலுவை சீண்டிய மம்தா:
முன்னதாக நேற்று ரயில் பட்ஜெட் தாக்கலின்போதும் லாலு பிரசாதும் மம்தா பானர்ஜியும் அவ்வப்போது மோதினர்.
கடந்த பிப்ரவரி மாதம் லாலு பிரசாத் தாக்கல் செய்த ரயில்வே இடைக்கால பட்ஜெட்டால் எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லை என்று மம்தா கூறியபோது லாலு அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
மேற்கு வங்காள மாநில திட்டங்களை அறிவித்தபோது, லாலு பிரசாத்தை நோக்கி, நீங்கள் பிகாருக்காக நிறைய செய்தீர்கள். அதைப் போல என்னையும் எனது மாநிலத்திற்கு ஒன்றிரண்டு பணிகளைச் செய்ய விடுங்கள் என்றார்.
இதற்கு பட்ஜெட் தாக்கலுக்குப் பின் பதிலடி தந்தார் லாலு. அவர் கூறுகையில், மம்தாவுக்கு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது என்று கருதுகிறேன் என்றார் தடாலடியாய்.
மம்தாவுக்கு நிதிஷ் ஆதரவு...
இந் நிலையில் லாலு காலத்தில் ரயில்வே துறையின் செயல்பாடுகள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட்டால் கடந்த 5 ஆண்டுகளில் ரயில்வே துறை லாபம் ஈட்டியதாக கூறிக் கொள்ளும் லாலு பிரசாத்தின் குட்டு வெளிப்படும் என்று பிகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.