விடுதலைப் புலிகளின் அனைத்துலக பிரிவின் புதிய இணையதளம்
வன்னி: விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச உறவுகளுக்கான செயலகத்திற்கென பிரத்யேக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விடுதலைப் புலிகள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் இன்றைய காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் நிலைப்பாடுகள், அனைத்துலக உறவுகளுக்கான செயலகம் மேற்கொண்டு வரும் ராஜதந்திரப் பணிகள் போன்றவற்றை மக்களுக்கு அறியத்தருவதும் அவை தொடர்பான கருத்துக்களை மக்களுடன் பரிமாறிக் கொள்வதும் அவசியம் என எமது இயக்கம் உணர்கின்றது.
இதற்கு துணைபுரியும் வகையிலேல் www.ltteir.org என்ற இணையத்தளம் அறிமுகப்படுத்தப்படுகின்றது.
மேலும் - மக்களோடு நெருங்கி செயல்படும் நோக்குடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் அவர்களுக்கு என பிரத்தியேகமாக - 'பத்மநாதன் பக்கங்கள்' எனும் ஒரு சிறப்புத் பகுதியும் இந்த தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
வாரம் தோறும் சனிக்கிழமைகளில் தமிழிலும், புதன்கிழமைகளில் ஆங்கிலத்திலும் அவர் தனது கருத்துக்களை இச்சிறப்புப் பக்கத்தில் பதிவு செய்வார். அதில் அவர் மக்களுடன் கருத்துப் பரிமாற்றங்களைச் செய்து கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் வாய்ஸ் ஆப் டைகர்ஸ்:!
இந் நிலையில் இணையதளம் மூலம் விடுதலைப் புலிகளின் வானொலியான புலிகளின் குரல் மீண்டும் விரைவில் ஒலிபரப்பைத் தொடங்கவுள்ளதாம்.
1990ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது புலிகளின் குரல் வானொலி. அதன் பின்னர் அந்த வானொலியை அழிக்க இலங்கைப் படைகள் கிட்டத்தட்ட 23 முறை தாக்குதல்கள் நடந்தன. ஆனாலும் உடனுக்குடன அது சரி செய்யப்பட்டு ஒலிபரப்பைத் தொடர்ந்து வந்தது.
இந்த நிலையில் வன்னியில் போர் உச்சத்தில் இருந்த நிலையில், கடந்த மே மாதம் 16ம் தேதியுடன் புலிகளின் குரல் வானொலி தனது ஒலிபரப்பை நிறுத்திக் கொண்டது.
இந்த நிலையில் தற்போது இன்டர்நெட் மூலம் இந்த வானொலி வருகிற 5ம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளதாம். அன்றைய தினம் கரும்புலிகளின் நினைவு தினம் என்பது குறிப்பிடத்தக்கது.