சசிகலா உறவினர் டாக்டர் வெங்கடேசுக்கு ஜெ முக்கிய பதவி
சென்னை: சசிகலாவின் உறவினர் டாக்டர் வெங்கடேஷ் அதிமுகவின் இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் கூட்டணிக் கட்சிகளுடன் இடங்கள் பங்கீடு குறித்து ஜெயலலிதா பேச்சுவார்த்தை நடத்தியபோது உடனிருந்தவர் வெங்கடேஷ். மேலும் இவரும் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சு நடத்தியதும் உண்டு.
இந் நிலையில் இவருக்கு முக்கியமான பதவியை அளித்துள்ளார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின உடன் பிறவா சகோதரியான சசிகலாவின் மூத்த சகோதரர் சுந்தரவதனத்தின் மகன் தான் இந்த வெங்கடேஷ்.
அண்மைக்காலமாக போயஸ் கார்டன் நிர்வாகத்தையும் இவர் தான் கவனித்து வருகிறார்.
கடந்த மே மாதம் 27ம் தேதி அதிமுக தலைமைக் கழகத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு எடுத்த முடிவின்படி இவர் இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
சசிகலாவின் உறவினர்களான டிடிவி தினகரன் மற்றும் மகாதேவன் ஆகியோர் ஏற்கனவே தலைமைக் கழக நிர்வாகப் பொறுப்பில் நியமிக்கப்பட்டு கழற்றிவிடப்பட்டனர்.
இந்நிலையில் டாக்டர் வெங்கடேஷ் அதிமுக தலைமைக் கழகப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.