9ம் தேதி முதல் பால் உற்பத்தியாளர்கள் ஸ்டிரைக்!
இது குறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச் சங்கத்தின் தலைவர் செங்கோட்டுவேல் கூறுகையில்,
தமிழகத்தில் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பால் உற்பத்தி செய்து வருகிறார்கள். தினமும் ஒரு கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது.
இப்போது கலப்புத் தீவன விலையேற்றம் 60 சதவீதம் உயர்ந்துள்ளது. தவிடு மற்றும் புண்ணாக்கு விலையும் கடுமையாக உயர்ந்துள்ளன. இதனால் பால் உற்பத்திச் செலவு பல மடங்கு அதிகரித்துவிட்டது.
இதனால் எங்களிடம் அரசு வாங்கும் பாலின் விலையை உயர்த்த வேண்டும். இப்போது பசும்பால் லிட்டருக்கு ரூ.13.50க்கும், எருமைப் பால் லிட்டருக்கு ரூ.18.50க்கும் அரசால் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்த கொள்முதல் விலையை பசும்பாலுக்கு லிட்டருக்கு 20 ரூபாயாகவும், எருமைப் பாலுக்கு லிட்டருக்கு 30 ரூபாயாகவும் உயர்த்த வேண்டும்.
ஆவின் நிறுவனம் மூலம் தினமும் 25 லட்சம் லிட்டர் வினியோகம் செய்யப்படுகிறது. சென்னையில் மட்டும் தினமும் 10 லட்சம் லிட்டர் பால் பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது. தற்போது பால் உற்பத்தியால் 1 லிட்டருக்கு ரூ. 8 இழப்பு ஏற்படுகிறது.
தமிழகத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையத்தின் கீழ் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம், கிராமங்களில் உற்பத்தியாளர் சங்கம் ஆகியவை இயங்கி வருகி்ன்றன.
கிராம உற்பத்தியாளர் சங்கங்களில் 25,000 பேர் வேலை பார்க்கின்றனர். இந்த சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். பணியாளர்களுக்கு பணியை வரமுறைப்படுத்தி ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.
எங்களது இந்த கோரிக்கைகளை நீண்டகாலமாகவே அரசிடம் வைத்துள்ளோம். நிறைவேற்றித் தருவதாக அரசும் கூறியது. ஆனால், இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இனியும் தாமதித்தால் பால் உற்பத்தியாளர்கள் நிலைமை மிகவும் மோசமாகிவிடும்.
எங்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக்கோரி வரும் 9ம் தேதி முதல் காலவரையற்ற பால் உற்பத்தி நிறுத்த போராட்டம், கால்நடைகளுடன் சாலை மறியல் போராட்டம் ஆகியவற்றை தமிழகம் முழுவதும் நடத்தவுள்ளோம். அன்று காலை முதல் பால் வழங்குவதை நிறுத்துவோம் என்றார்.