தண்டவாளத்தில் தலைகுப்புற விழுந்த மினிபஸ்-11 பேர் பலி
கொல்கத்தா: கொல்கத்தா ஹவுரா ரயில் நிலைய மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த மினிபஸ் ஒன்று திடீரென தலைகுப்புற ரயில் தண்டவாளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 11 பேர் பலியானார்கள்.
கொல்கத்தாவில் உள்ள சங்க்ரைல் என்ற பகுதியில் இருந்து ஹவுராவுக்கு நேற்று மாலை சுமார் 3.40 மணிக்கு ஒரு மினி பஸ் வந்து கொண்டிருந்தது.
அந்த மினி பஸ், ஹவுரா ரயில்வே நிலைய மேம்பாலத்துக்கு மேலே சென்று கொண்டிருந்த போது, முன்னாள் சென்ற பஸ் ஒன்றை முந்த முயன்றுள்ளது. அப்போது அதிவேகத்தில் சென்ற மினி பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, பாலத்தில் சுவரில் மோதியது.
பின்னர் அதில் இருந்து 40 அடி கீழே இருந்த ரயில்வே தண்டவாளத்தில் 11வது மற்றும் 12வது பிளாட்பார்ம்களுக்கு இடையே தலைகுப்புற விழுந்து சுக்கு நூறாக நொறுங்கியது.
மேலும் மின்சார ரயிலுக்காக போடப்பட்டிருந்த மின் ஓயர்கள் மீது விழுந்து அவற்றை துண்டித்தன. இதை பார்த்து கொண்டிருந்த ரயில்வே பயணிகள் அதிர்ச்சியில் கூப்பாடு போட்டனர். பின்னர் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவ முயன்றனர்.
இதில் பஸ்சில் பயணம் செய்து 3 பெண்கள் உட்பட 11 பேர் பலியானார்கள். மற்றவர்கள் பலத்த காயத்துடன் உயிர்பிழைத்து கொண்டனர். அதில் 11 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹவுரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து விபத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், அந்த மினி பஸ் ஈரமான சாலையில் அதிவேகமாக வந்தது. சாலையின் ஓரத்தில் வந்து கொண்டிருந்த என் மீது மோத வந்தது. நல்லவேளையாக சுதாரித்து கொண்டு ஓடிவிட்டேன். அதன் பின்னர் மேலிருந்து ரயில் தண்டவாளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி விட்டது என்றார்.
ஹவுரா எஸ்பி நீரஜ் குமார் கூறுகையில், விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. தவறு டிரைவர் மீதா அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து நடந்துள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றார்.
இந்த விபத்து காரணமாக ஹவுரா ரயில் நிலையத்தில் நேற்று போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.