இந்திய கிராமம் மீது பாக். தீவிரவாதிகள் ராக்கெட் தாக்குதல்
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்திலுள்ள கிராமத்தின் மீது பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பு ஒன்று ராக்கெட் வீசித் தாக்குதல் நடத்தியது. இதில் ஒருவர் காயமடைந்தார்.
பஞ்சாப் மாநிலத்தில் தான்டே என்ற விவசாய கிராமம் இருக்கிறது. இது பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லையில் இருந்து சுமார் 2.5 கிமீ., தூரத்தில் இருக்கிறது.
நேற்று இரவு சுமார் 9.50 மணிக்கு வானிலிருந்து நெருப்பு பந்து ஒன்று பறந்துவந்து இந்த கிராமத்தை சேர்ந்த நெல் வயலில் விழுந்து பெரும் சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. இதனால் வயலில் சுமார் 10 அடி அகலத்துக்கு பெரிய பள்ளம் ஏற்பட்டது. அந்த வயலின் ஒரு பகுதி முற்றிலுமாக கருகி நாசமடைந்துவிட்டது.
இதையடுத்து அப்பகுதி மக்கள் பாகிஸ்தான் ராணுவம் மிகப்பெரிய தாக்குதலை நடத்த துவங்கியுள்ளதாக நினைத்து கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி ஓடினர்.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட எல்லை பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவத்திடம் விளக்கம் கேட்டுள்ளனர். மேலும், இந்த தாக்குதலை நடத்தியது பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகளாக இருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து இந்திய ராணுவம் அதிகாரி ஒருவர் கூறுகையில், அந்த தீவிரவாத அமைப்பு இரண்டு ராக்கெட்களை இந்தியாவை நோக்கி செலுத்தியுள்ளது. அதில் ஒன்று இந்த கிராமத்தில் விழுந்துள்ளது.
இன்னொன்று குறி தவறி பாகிஸ்தான் எல்லைக்குள்ளேயே விழுந்து விட்டது. இது எல்லை பகுதியில் இருந்து சுமார் 2 கிமீ., தொலைவில் இருந்து வீசப்பட்டுள்ளது என்றார்.
இந்த சூழ்நிலையில் அப்பகுதியில் இருக்கும் எல்லை பாதுகாப்பு படையினரிடம் இது போன்ற ராக்கெட்களை வழிமறித்து தடுக்கும் வகையில் எந்த ஆயுதமும் இல்லை என்பது வருத்தத்துக்குரியது.
இந்நிலையில் எல்லை பாதுகாப்பு படை ஐஜி ஹிமாத் சிங் கூறுகையில், பாகிஸ்தான் ராணுவத்துடன் கமாண்டர்கள் அளவில் நேற்று இரவு பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர்களிடம் கடும் கண்டனம் தெரிவித்தோம்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி விரைவில் தெரிவிப்பதாக பாகிஸ்தான் ரேஞ்சர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலை பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்புகள் நடத்தவில்லை என கூற முடியாது என்றார் அவர்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த தில்பாக் சிங் கூறுகையில், நெல் வயலுக்கு ஏதோ விழுந்து பயங்கரமாக வெடித்தது. அதில் ஒரு பகுதி பறந்து வந்து என் காதில் விழுந்தது. இதனால் எனக்கு படுகாயம் ஏற்பட்டது என்றார்.
சுக்வீந்தர் கவுர் என்ற பெண்மணி கூறுகையில், வயலில் ஏதோ ஒன்று வெடித்து சிதறியது. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்க துவங்கியதாக நினைத்து நாங்கள் பயத்தில் வீட்டைவிட்டு வெளியேறி ஓடினோம். அது எங்கள் வீட்டில் விழுந்திருந்தால் என்ன செய்வது என்றார்.