வருண் உயிருக்கு ஆபத்து - கண்டுகொள்ளாமல் இருக்கும் சிதம்பரம்: மேனகா பாய்ச்சல்
டெல்லி: வருண் காந்தியின் உயிருக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து சற்றும் கவலைப்படாமல், கூடுதல் பாதுகாப்பு கோரி மனு கொடுத்தும் அதை கிடப்பில் போட்டு வைத்துள்ளார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் என்று மேனகா காந்தி பாய்ந்துள்ளார். இதுகுறித்து பிரதமருக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.
வருண் காந்தி இன்று டெல்லியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், எனது வக்கீல்களைக் கொல்வதற்காக சோட்டா ஷகீலின் கூட்டாளிகள் 6 பேர் ஏவப்பட்டுள்ளனர். குறி பார்த்து சுடுவதில் வல்லவர்களான அவர்களை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.
உண்மையில் அவர்களின் குறி நானாகத்தான் இருக்கக் கூடும். எனவே எனது உயிருக்கு ஆபத்து அதிகரித்துள்ளது.
தீவிரவாதிகளுக்கும், இதுபோன்ற கூலிப்படையினருக்கும் எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
சோட்டா ஷகீலின் கூலிப்படையினர் பிடிபட்டுள்ளதன் மூலம், எனக்கு நேரடி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவே கருதுகிறேன்.
எனக்கு எதிராக கொலைச் சதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பது குறுகிய காலத்திற்குள் இது இரண்டாவது முறையாகும். தனிப்பட்ட முறையில், இதுபோன்ற செயல்களுக்கெல்லாம் நான் அஞ்சப் போவதில்லை என்று கூறியிருந்தார் வருண்.
இதற்கிடையே, ப.சிதம்பரம் மீது பாய்ந்துள்ளார் வருணின் தாயாரான மேனகா காந்தி. இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், எனது மகனின் உயிருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை உள்துறை அமைச்சகம் தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல் அசட்டையாக உள்ளது. மிகச் சாதாரணமாக எடுத்துக் கொண்டுள்ளனர். வருண் காந்தி கொல்லப்பட வேண்டும் என அனைவரும் நினைப்பது போல தெரிகிறது.
நாட்டில் உள்ள ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் பாதுகாப்பது இயலாத காரியம் என பேசுகிறார் ப.சிதம்பரம் என்று சாடியுள்ளார் மேனகா காந்தி.
பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள வருண் காந்தி அவற்றிலிருந்து மீள்வதற்காக பல்வேறு வக்கீல்களை அமர்த்தியுள்ளார். அதில் ஒரு வக்கீலைக் கொல்லத்தான் சோட்டா ஷகீலின் கூலிப்படையினர் டெல்லிக்குள் ஊடுறுவியிருந்தனர். அவர்களைத்தான் நேற்று டெல்லி போலீஸார் கைது செய்தனர்.