வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 1.6 லட்சமாக உயர்வு
பெண்களுக்கான வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 10,000மும் மூத்த குடிமக்களுக்கான வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 15,000மும் உயர்த்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:
இதுவரை ரூ.1.5 லட்சமாக இருந்த வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 1.6 லட்சமாகிறது. இதன்மூலம் இனி ரூ. 1.6 லட்சம் வரை வரி இருக்காது. அதற்கு மேலான ஊதியத்துக்கே வருமான வரி இருக்கும்.
பெண்களின் வருமானத்தில் 1.9 லட்சம் வரை இனி வரி விலக்கு கிடைக்கும். முதியோருக்கு ரூ. 2.4 லட்சம் வரை வரி விலக்கு கிடைக்கும்.
அதே போல ஆண்டு ஊதியம் ரூ. 10 லட்சத்துக்கு அதிகமாக உள்ளவர்களுக்கு இதுவரை விதிக்கப்பட்டு வந்த 10 சதவீத கூடுதல் வரி வாபஸ் பெறப்பட்டுள்ளது.
அதேபோல வருமான வரி தாக்கல் செய்வதற்கான முறைகள் எளிமைப்படுத்தப்படவுள்ளன. இதற்காக சரால் (Saral) திட்டத்தில் சில மாறுதல்கள் செய்யப்பட்டு சரால்-2 என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
மேலும் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வழங்கி வந்த சலுகைத் திட்டங்கள் (குறைந்த விலை உணவு, போக்குவரத்து) ஆகியவை மீதான வரி (Fringe Benefit Tax) விலக்கப்பட்டுவிட்டது.
அதே நேரத்தில் கார்பரேட் நிறுவனங்களுக்கான வரி விதிப்பில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
18 ஜஜி திட்டத்தின் கீழ் மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவற்றுக்கான வருமான வரி விலக்கு ரூ. 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.