சரப்ஜித்துக்கு கருணை-மீண்டும் மனு
லாகூர்: தூக்குக் கயிற்றுக்கு வெகு அருகில் வந்து விட்ட இந்தியர் சரப்ஜித் சிங்குக்குக் கருணை காட்ட வேண்டும் என்று கோரி பாகிஸ்தான் அதிபர் சர்தாரியிடம் புதிதாக கருணை மனு ஒன்றை சிங்கின் வழக்கறிஞர் நாளை மறுதினம் சமர்ப்பிக்கவுள்ளார்.
லாகூரில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்குக் காரணம் என்று கூறி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார் சரப்ஜித் சிங்.
பல்வேறு முயற்சிகளால் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை தள்ளிப் போடப்பட்டு வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட், தண்டனையை ரத்து செய்ய முடியாது என்று கூறி தீர்ப்பளித்து விட்டது.
இதையடுத்து சரப்ஜித் சிங் சார்பில் அதிபரிடம் கருணை மனு தாக்கல் செய்ய அவரது வக்கீல் முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து சரப்ஜித் சிங்குக்காக ஆஜராக நியமிக்கப்பட்டுள்ள புதிய வக்கீலான ஓவைஸ் ஷேக் கூறுகையில், சரப்ஜித் சிங் எழுதிய கடிதத்துடன் இணைத்து இந்த கருணை மனு சர்தாரிக்கு அளிக்கப்படும்.
இந்த புதிய கருணை மனு புதன்கிழமை அதிபரிடம் வழங்கப்படும். இதற்காக நேரம் கேட்டு விண்ணப்பித்துள்ளேன். தனிப்பட்ட முறையில் அவரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்கவும் உள்ளேன்.
மனித நேய அடிப்படையில் தன்னை மன்னித்து விடுதலை செய்ய உத்தரவிடக் கோரியும், தனது மனைவி, குடும்பத்துடன் தான் வாழ விரும்புவதாகவும் கடிதத்தில் கூறியுள்ளார் சரப்ஜித் சிங் என்றார் ஓவைஸ் ஷேக்.