ஜூலை 13ல் இந்துஸ்தான் டைம்ஸின் மின்ட் நாளிதழ் சென்னையில் தொடக்கம்
மும்பை: இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் குழுமத்திலிருந்து வெளியாகும் வர்த்தக தினசரியான மின்ட், ஜூலை 13ம் தேதி முதல் சென்னையிலிருந்து வெளியாகிறது.
ஏற்கனவே டெல்லி, மும்பை, பெங்களூர், சண்டிகர், புனே, கொல்கத்தா ஆகிய நகரங்களில் மின்ட் வெளியாகிறது. இப்போது 7வது நகரமாக சென்னையும் இதில் சேருகிறது.
இதுகுறித்து மின்ட் நாளிதழின் பதிப்பாளர் விவேக் கண்ணா கூறுகையில், சென்னையில் ஆரம்பத்தில் 15,000 பிரதிகள் அச்சடிக்கப்படும். நாளிதழின் விலை ரூ. 3.50 ஆக இருக்கும்.
டெல்லி, கொல்கத்தாவில் இந்த நாளிதழ் ரூ. 3க்கு விற்கப்படுகிறது. மும்பை, பெங்களூர் பதிப்புகள் முறையே ரூ. 2 மற்றும் ரூ. 3.50 என விற்கப்படுகிறது.
தேசிய அளவிலான செய்திகள் தவிர எங்களது பங்குதாரரான வால் ஸ்ட்ரீட் ஜர்னலிலிருந்தும் செய்திகளை பிரசுரிக்கவுள்ளோம். தென்னிந்தியாவை முக்கியமாகக் கொண்ட செய்திகளும் அதிக அளவில் இடம்பெறும் என்றார்.
சென்னைப் பதிப்பின் எடிட்டராக ஆர். சுகுமார் செயல்படுவார்.
2007ம் ஆண்டு தொடங்கப்பட்ட மின்ட், சென்னையில் ஏற்கனவே வெளியாகிக் கொண்டிருக்கும் எக்கனாமிக் டைம்ஸ், பிசினஸ் ஸ்டான்டர்ட், ஹிந்து பிசினஸ் லைன், பினான்சியல் குரோனிக்கிள் ஆகியவற்றோடு போட்டியில் குதித்துள்ளது.