நிதிப் பற்றாக்குறை-மத்திய அரசு ஏமாற்றுகிறது
டெல்லி: நாட்டின் நிதிப் பற்றாக்குறை 2.7 சதவீதத்தில் இருந்து 6.8 சதவீதமாக உயர்ந்துள்ளதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது உண்மையல்ல. நிதிப் பற்றாக்குறையை குறைத்துக் காட்டி மக்களை ஏமாற்றியுள்ளனர் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
அக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுஷ்மா ஸ்வராஜ் கூறுகையில்,
உலகப் பொருளாதார வீழ்ச்சி இந்திய பொருளாதாரத்தின் மீதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரத்தை மீளச் செய்ய பட்ஜெட்டில் வழி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கான எந்த முயற்சியும் பட்ஜெட்டில் இல்லை.
வேலைவாய்ப்பை பெருக்கும் உள்கட்டமைப்பு மற்றும் வீட்டுவசதித் துறைக்கு ஊக்கம் தரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தத் துறைகளுக்கும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் தரப்படவில்லை.
முதலீடுகளை கவர்ந்திழுக்கவோ, பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கவோ திறனற்ற பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது.
நாட்டின் நிதிப் பற்றாக்குறை 2.7 சதவீதத்தில் இருந்து 6.8 சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது உண்மையல்ல. நிதிப் பற்றாக்குறையை குறைத்துக் காட்டி மக்களை ஏமாற்றியுள்ளனர்.
வருமான வரிச் சலுகை அதிகரிக்கப்பட்டால் தனி நபரின் வாங்கும் திறன் அதிகரிக்கும், இதனால் பொருளாதாரம் ஸ்திரமடையும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அதிலும் அரசு கவனம் செலுத்தவில்லை.
சுவிஸ் வங்கியில் கணிசமாக முடங்கிக் கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்டு வருவது குறித்து பட்ஜெட்டில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
கட்சிகள் திரட்டும் தேர்தல் நன்கொடைக்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது மட்டுமே ஆறுதல் அளிக்கிறது என்றார்.
இது பணக்காரர்களுக்கான பட்ஜெட்...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி கூறுகையில்,
ஏழைகளைப் பற்றி தேர்தல் நேரத்தில் பேசிவிட்டு பட்ஜெட்டில் பணக்காரர்களுக்கு திட்டங்களை அறிவித்துள்ளது காங்கிரஸ் கூட்டணி அரசு.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ஒதுக்கியுள்ள நிதி மிகவும் குறைவானது.
'அந்த்யோதயா' திட்டத்தின்கீழ், வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களுக்கு ரூ.2க்கு 35 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரூ.3க்கு 25 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வழங்கப்படும் அரிசி, கோதுமையின் அளவை மத்திய அரசு குறைத்துவிட்டதே உண்மை.
3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் ரூ.35,000 கோடி வருவாய் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அப்படியெனில், 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பெரிய ஊழல் நடந்துள்ளது உறுதியாகியுள்ளது என்றார்.
காங்-பாஜகவுக்கு லாபம்..
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியி்ன் மூத்த எம்பி குருதாஸ் தாஸ்குப்தா கூறுகையில், நாடு சந்திக்கும் பொருளாதார சவால்களுக்கு ஏற்றதாக பட்ஜெட் இல்லை.
கட்சிகளுக்கு நிறுவனங்கள் தரும் நன்கொடைக்கான வரி ரத்து செய்யப்பட்டதால் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்குதான் பலன் கிடைக்கும். எங்களுக்கு எந்த நிறுவனமும் நன்கொடை தருவதில்லை, நாங்கள் வாங்குவதும் இல்லை என்றார்.