ஒரு திட்டம், 2 பெயர்: மாயா-காங். மல்லுக்கட்டு!
டெல்லி: மாயாவதியின் பக்கம் திரண்டு நிற்கும் தலித் மக்களை அப்படியே பிரித்துக் கொண்டு வரும் முயற்சியாக, தலித் மக்களைக் கவரும் வகையில், தலித் கிராமங்களை மேம்படுத்தும் பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா என்ற திட்டத்தை பட்ஜெட்டில் அறிவித்துள்ளது காங்கிரஸ்.
மாயாவதிக்கு முக்கிய ஆதாரமாக இருப்பது தலித் வங்கிதான். இதை காலி செய்து மாயாவதியை துவம்சம் செய்யும் வேலையில் காங்கிரஸ் படு வேகமாக இறங்கியுள்ளது.
ராகுல் காந்தியை வைத்து இந்த காயை நகர்த்தத் தொடங்கியுள்ளது காங்கிரஸ். ராகுல் காந்தி பிறந்த நாளை தலித் மக்களுடன் கொண்டாடி உ.பி.யைக் கலக்கியது காங்கிரஸ்.
இந்த நிலையில், பட்ஜெட்டில் பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா என்கிற தலித் கிராமங்களை மேம்படுத்தும் மெகா திட்டத்தை அறிவித்துள்ளது.
இது நேரடியாக மாயாவதி மீது காங்கிரஸ் தொடுத்துள்ள போராக கருதப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் தலித் மக்கள் வசிக்கும் கிராமங்கள் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடியதாக மேம்படுத்தப்படும். மத்திய அரசின் சமூக நீதித்துறை இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும்.
50 சதவீதத்திற்கும் மேற்பட்ட தலித் மக்கள் வசிக்கும் 44 ஆயிரம் கிராமங்களை மேம்படுத்தவுள்ளனர். முதல் கட்டமாக 1000 கிராமங்களை மேம்படுத்தும் பைலட் திட்டத்திற்கு நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக ரூ. 100 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸின் இந்தத் திட்டத்தால் பகுஜன் சமாஜ் கட்சி கடுப்பாகியுள்ளது. காரணம், ஏற்கனவே உ.பியில் இதேபோல அம்பேத்கர் கிராம் யோஜனா திட்டத்தை அமல்படுத்தி வருகிறது பகுஜன் சமாஜ். இதே போன்ற திட்டத்தை மத்திய அரசும் அறிவித்திருப்பது வேண்டும் என்றே தங்களை சீண்டும் செயல் என பகுஜன் கருதுகிறது.
ஏற்கனவே லோக்சபா தேர்தலில் பலவீனமடைந்த நிலையில் இருக்கும் பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் அரசின் இந்தப் புதிய திட்டம் தங்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என கலங்கிப் போயுள்ளதாம்.
உ.பியில் மூனு சீட் முனுசாமி ரேஞ்சுக்குத்தான் காங்கிரஸ் இருந்து வந்தது. ஆனால் சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் அங்கு 21 சீட்களை காங்கிரஸ் அபகரித்து பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஆப்படித்து விட்டது நினைவிருக்கலாம்.
தற்போது தலித் வாக்கு வங்கியை தன் பக்கம் வளைத்து விட்டால் உ.பியில் கூடுதல் சீட்களைப் பெறுவதோடு, மீண்டும் ஆட்சியையும் பிடிக்கலாம் என காங்கிரஸ் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
தலித் வாக்கு வங்கியை சுற்றிச் சுற்றி வந்து மாயாவதியும், காங்கிரஸும் அடிக்கும் இந்த கும்மி எங்கு போய் முடியப் போகிறதோ..