மேனகா புகார் எதிரொலி: வருணுக்கு இசட் பிளஸ்!
பிலிபித் தொகுதியில் போட்டியிட்டபோது இஸ்லாமியர்களுக்கு எதிராக மிகக் கடுமையாக பேசி வாங்கிக் கட்டிக் கொண்டார் வருண் காந்தி.
இதையடுத்து அவருக்குப் பாதுகாப்பு தரப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் கூடுதல் பாதுகாப்பு கோரி உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை நேரில் சந்தித்து மனு அளித்தார் வருண் காந்தி. இருப்பினும் நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு தருவது இயலாத காரியம் என்று பின்னர் கூறினார் ப.சிதம்பரம்.
இதற்கு வருணின் தாயார் மேனகா காந்தி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சோட்டா ஷகீலின் கூலிப்படையினர் ஏழு பேரை டெல்லி போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், வருண் காந்தியின் வக்கீல் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை தீர்த்துக் கட்டும் நோக்கில் ஊடுறுவியதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து பிரதமருக்கு மேனகா காந்தி கடிதம் எழுதினார். அதில் வருண் காந்தியின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பை அதிகரிக்கக் கோரி ப.சிதம்பரத்திடம் கூறியும் அவர் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். பிரதமரின் குழந்தைகளுக்கு இதுபோன்ற நிலை வந்தால் ப.சிதம்பரம் இப்படித்தான் பேசிக் கொண்டிருப்பாரா என்று காட்டமாக கேட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று வருண் காந்திக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அவர் இசட் பிளஸ் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான உத்தரவை உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளதாக கூற்பபடுகிறது.
ஆனால் வருணுக்கு எக்ஸ் பிரிவு பாதுகாப்புதான் வழங்கப்பட்டுள்ளது. இசட் பிரிவு பாதுகாப்பு தரப்படவில்லை என்று மேனகா தரப்பில் கூறப்பட்டுள்ளது.