For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூட்டுறவு வங்கிக் கடன்-ரூ.251 கோடிக்கு சலுகைகள

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் விவசாயம் சாராத தொழில்களுக்குக் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட கடனை திருப்பிச் செலுத்த முன் வருபவர்களுக்கு வட்டி பாதியாக குறைக்கப்படுவதுடன், அபராத வட்டி இதர செலவுத் தொகைகள் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.251.21 கோடி தள்ளுபடி செய்யப்படும். இதனால் 1.32 லட்சம் பேர் பயனடைவர்.

சட்டசபையில் இன்று விதி 110ன் கீழ் நிதியமைச்சர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கை:

திமுக அரசு பொறுப்பேற்ற அன்றே விவசாயிகளின் துயர் துடைக்க ரூ.7,000 கோடி அளவிற்கான விவசாயக் கூட்டுறவுக் கடன்களை ரத்து செய்து ஆணையிடப்பட்டது. ஆனால் விவசாயம் சாராத தொழில்களுக்குக் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட கடன்கள் தொழிற் கடன்கள் என்பதால் அவை ரத்து செய்யப்படவில்லை.

இவ்வாறு தொழில் சார்ந்த, பண்ணை சாராக் கடன்களையும் தள்ளுபடி செய்யக் கோரிக்கை எழுப்பப்பட்டது. இத்தகைய கடன்கள், விசைத்தறி, போக்குவரத்து வாகனங்கள், செங்கல் சூளை போன்ற தொழில்களுக்காக கடனாகக் கூட்டுறவு வங்கிகளால் வழங்கப்பட்டவை.

இக்கடன்களின் மீது அவை வழங்கப்பட்ட காலத்தில் நடைமுறையில் இருந்த அதிக வங்கி வட்டி வீதத்தையொட்டி 18% வரை கூட்டு வட்டி வசூலிக்கப்பட்டது. மேலும் தவணை தவறிய தொகைக்கு 3% அபராத வட்டியும் வசூலிக்கப்பட்டது.

இவை சொத்து அடமானத்தின் அடிப்படையில் தொழில் செய்வதற்காகப் பெறப்பட்ட கடன் என்பதால், முழுவதும் தள்ளுபடி செய்ய இயலாது என்ற நிலையில்,கடன் பெற்றோர் தொடர்ந்து தொழில் செய்திட ஏதுவாகப் புதிய திட்டம் ஒன்று கடந்த 27.12.2006 அன்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கடனை உடனடியாகச் செலுத்த முன் வருபவர்களுக்கு அத்தகைய கடன்கள் மீதான கூட்டு வட்டி 18 சதவீதம் வரை இருந்ததை மாற்றி 12 சதவீத சாதாரண வட்டி செலுத்தலாம் எனக் குறைக்கப்பட்டது. மேலும் அபராத வட்டியும் தள்ளபடி செய்யப்பட்டது. இந்தச் சலுகைத் திட்டம் கடந்த மாதம் 30ம் தேதி வரை செயல்படுத்தப்பட்டது.

இச் சலுகைத் திட்டத்தின்கீழ் ரூ.509.99 கோடி கடன் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடன் பெற்றவர்கள் ரூ.127,93 கோடி அளவுக்குச் சலுகை பெற்றுள்ளனர்.
ஆனால், இன்னமும் ரூ.709.51 கோடி கடன் பாக்கி நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், இத்தகைய பண்ணைசாரா கடன் மீதான வட்டியையாவது தள்ளுபடி செய்து கடனைத் திருப்பிச் செலுத்த உதவ வேண்டுமென்ற கோரிக்கைகள் பல்வேறு தரப்பிலிருந்துதம் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

எனவே அரசு ஒரு சிறப்பு கடன் தீர்வுத் திட்டத்தை பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு செயல்படுத்த முடிவெடுத்துள்ளது.

இத் திட்டம் 31.3.2007க்குள் இறுதித் தவணை செலுத்த வேண்டி இருந்து அதைக் கட்டத் தவறிய பண்ணை சாராக் கூட்டுறவு கடனுக்கு மட்டுமே பொருந்தும்.
கடனைத் திரும்பச் செலுத்த முன்வருபவர்களுக்கு தற்போது வசூலிக்கப்படும் 12% சாதாரண வட்டிக்குப் பதிலாக, வங்கியில் கடன் பெற்ற தேதியிலிருந்தே 6% சாதாரண வட்டி மட்டுமே வசூலிக்கப்படும். அபராத வட்டியும், இதர செலவுத் தொகையும் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்.

இத்திட்டத்தின்படி வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் வங்கியுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளவும், அதன்படி கடன் முழுவதும் திரும்பச் செலுத்த, ஒப்பந்தம் போடப்பட்ட நாளிலிருந்து மூன்று மாத காலம் வரையில் மட்டுமே அனுமதிக்கப்படும்.

ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்திட்டு 25% தொகையை உடனடியாகச் செலுத்தி, மீதி 75% தொகையை ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்ட மூன்று மாதத்திற்குள்ளாக ஒரு தவணையாகவோ, ஒன்றுக்கும் மேற்பட்டால் மூன்று தவணையாகவோ திரும்பச் செலுத்த வேண்டும்.

இந்த புதிய வட்டிச் சலுகை திட்டத்தின் மூலம் கூட்டுறவு வங்கிகளுக்கு ஏற்படும் வட்டி இழப்பில் 4 சதவீதத்தை மாநில அரசே ஈடுசெய்யும். மீதித் தொகையை வங்கிகளே ஏற்கும்.

இந்தப் புதிய சிறப்புக் கடன் தீர்வுத் திட்டத்தின்கீழ் வட்டி குறைப்பு மூலம் உத்தேசமாக ரூ.144.62 கோடியும், அபராத வட்டி தள்ளுபடி மூலம் ரூ.101.98 கோடியும், இதர செலவுத் தள்ளுபடி மூலம் ரூ.4.61 கோடியும் ஆக மொத்தம் ரூ.251.21 கோடி அளவிற்குத் தள்ளுபடி செய்வதால் 1.32 லட்சம் பேர் பயனடைவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அன்பழகன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X