அதிமுக..குடல் வற்றி செத்த கொக்கு- பரிதி!
சட்டசபையில் இன்று சமத்துவபுரங்கள் தொடர்பாக நடந்த விவாதம்:
அதிமுக எம்எல்ஏ தேன்மொழி: சமத்துவபுரங்களில் இப்போது சாதி சண்டை நடக்கிறது. சமத்துவபுரங்களை கட்டியதால் இந்த புதிய பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது.
துணை முதல்வர் ஸ்டாலின்: சமத்துவபுரத்தில் சாதி சண்டை நடப்பதாக உறுப்பினர் கூறுகிறார். எங்கு நடந்தது என்பதை ஆதாரத்துடன் சொன்னால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்.
தேன்மொழி: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கல்குறிச்சி சமத்துவபுரத்திலும், சோழவந்தான் அருகே உள்ள சமத்துவபுரத்திலும் சாதி சண்டை நடந்துள்ளது.
அமைச்சர் தங்கம் தென்னரசு: கல்குறிச்சி கிராமம் எங்கள் ஊர் அருகில்தான் உள்ளது. நான் அங்கிருந்துதான் வருகிறேன். அங்கு அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை. பக்கத்தில் உள்ள 2 வீடுகளுக்கு இடையே நடைபெறும் வாய் சண்டையை சாதி சண்டை என்று சொல்வது சரியல்ல என்றார்.
பத்திர பதிவு குறித்து நடந்த விவாதம் விவரம்:
அதிமுக எம்எல்ஏ சின்னப்பன்: பவர் ஆப் அட்டார்னி என்ற முறையில் ஒருவருடைய சொத்தை இன்னொருவர் விற்கிறார். இதன் மூலம் பல மோசடிகள் நடைபெறுகின்றன. எனவே இது போன்ற முறையில் சொத்துக்களை விற்பதும் வாங்குவதும் முறைப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.
அமைச்சர் சுரேஷ்ராஜன்: பவர் ஆப் அட்டார்னி முறையில் சொத்துக்கள் பதிவு செய்வதை முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சம்பந்தப்பட்ட நிலத்தை சம்பந்தப்பட்ட இடத்தில்தான் பதிவு செய்ய வேண்டும் என்ற முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
இது தவிர இதில் உள்ள அனைத்து குறைகளையும் சரி செய்து முறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலி முத்திரைகளை ஒழிக்க பத்திரப் பதிவை மின்னணுமயமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
குடல் வற்றி செத்த கொக்கு:
சின்னப்பன்: மன்னார் வளைகுடா கடலில் நல்ல தண்ணீர் தீவு என்று ஒரு சிறிய தீவு உள்ளது. இங்கு நல்ல தண்ணீர் கிடைக்கிறது. இங்குள்ள கோவிலும் பிரபலமானது. தற்போது இந்த தீவுக்கு பாதுகாப்பு இல்லாத மீன்பிடி படகுகளில் சுற்றுலா பயணிகள் சென்று வருகிறார்கள். எனவே சுற்றுலாத்துறை, இந்த தீவுக்கு சென்று வர தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். மீண்டும் அதிமுக ஆட்சி வந்தால்தான் ஒளிமயமாக இருக்கும்.
அமைச்சர் பரிதி இளம்வழுதி: கடல் வற்றி மீன் பிடிக்க காத்திருக்கும் கொக்கு, குடல் வற்றி செத்த கதையாகத்தான் உங்கள் விருப்பம் உள்ளது.