ஜெ..கலர் டிவி ஊழல் வழக்கு-9-ல் விசாரணை
சென்னை: ஜெயலலிதா ஆட்சியில் பஞ்சாயத்துகளுக்கு கலர் டி.விக்கள் வாங்கியதில் நடந்த ஊழல் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை 9ம் தேதி தொடங்கும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த 1991-96 அதிமுக ஆட்சியில் பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு கலர் டிவிக்கள் வாங்கியதில் ரூ. 10 கோடி அளவுக்கு ஊழல் நடந்தது.
இதுதொடர்பாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர்கள் நெடுஞ்செழியன், செல்வகணபதி மற்றும் முன்னாள் தலைமைச் செயலாளர் ஹரிபாஸ்கர், ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி சசிகலா, சசிகலாவின் உறவினர் பாஸ்கரன் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஆனால், இந்த வழக்கிலிருந்து ஜெயலலிதா, நெடுஞ்செழியன், சசிகலா, பாஸ்கரன் ஆகியோரை சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.
ஹரிபாஸ்கர் உள்ளிட்ட 7 பேருக்கு தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. 10,000 முதல் ரூ. 30,000 வரை அபராதமும் விதிக்கப்பட்டது.
இதையடுத்து ஹரிபாஸ்கர் உள்ளிட்ட 7 பேர் தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
அதே போல ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பி்ன் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை ஜூலை 9ம் தேதி தொடங்கும் என்று நீதிபதி எம். ஜெயபால் அறிவித்துள்ளார்.
இந்த வழக்கு 9 வருடமாக விசாரணைக்கே வராமல் நிலுவையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.