For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராகிங்-தடுக்காத முதல்வரே முதல் குற்றவாளி!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: கல்லூரிகளில் நடக்கும் ராகிங் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தராத முதல்வர்கள் அதனால் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும். அந்த வழக்கில் அவர் முதல் குற்றவாளியாகவும் சேர்க்கப்படுவார் என சென்னை கூடுதல் கமிஷனர் ஷகில் அக்தர் தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக இந்தியா முழுவதும் ராகிங் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து உச்ச நீதிமன்றம் அனைத்து மாநிலங்களும் கமிட்டி அமைத்து ராகிங்கை தடுக்க வேண்டுமென அறிவுறுத்தியது.

இந்நிலையில் சென்னையில் ராகிங் குறித்து ஆராயும் கல்லூரி முதல்வர்கள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் கமிஷ்னர் அலுவலக அரங்கத்தில் நடந்தது.

இந்த கூட்டத்துக்கு கமிஷனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். அப்போது கல்லூரிகளில் ராகிங், ஈவ் டீசிங் போன்ற சமுக விரோத செயல்களை ஒடுக்க துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக கல்லூரி தனி அமைப்பை நிறுவ வேண்டும் என போலீஸ் அதிகாரிகள், கல்லூரி முதல்வர்களை கேட்டு கொண்டார்.

அப்போது ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில்,

சமீபத்தில் ஒரு வழிப்பறி வழக்கில் சிலரை கைது செய்தோம். அவர்களிடம் விசாரித்த போது அவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்கள் மது அருந்துவதற்கும், சினிமா பார்ப்பதற்கும், சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காகவும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறியது அதிர்ச்சி அளிக்கிறது.

இளம் வயதில் மாணவர்கள் இது போன்ற தவறான பாதையில் செல்லாமல் கல்லூரிகள் பார்த்து கொள்ள வேண்டும். மாணவர்களை சமுதாய பொறுப்புள்ளவர்களாக மாற்ற வேண்டியது அவர்களது கடமை. அவர்களை நல்வழிப்படுத்த வாரம் ஒரு முறை சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்றார்.

இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் போக்குவரத்து கூடுதல் கமிஷ்னர் ஷகில் அக்தர் நிருபர்களிடம் கூறுகையில்,

ராகிங் தொடர்பாக காவல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். ராகிங், ஈவ் டீசிங் போன்ற செயல்கள் குறித்து வரும் புகார்கள் மீது கல்லூரி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்காத காரணத்தால் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு கல்லூரி தான் பொறுப்பு.

அது போன்ற வழக்குகள் ஏற்பட்டால் கல்லூரி முதல்வர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்படுவார். மாணவிகள் ஈவ் டீசிங் குறித்த புகார்களை 95000 99100 என்ற எண்ணில் எஸ்எம்எஸ் தகவல் மூலம் புகார் தெரிவிக்கலாம். அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X