ரூ. 17 லட்சம் மோசடி - அதிகாரியை நடு ரோட்டில் வைத்து அடித்த பெண்கள்
நாகர்கோவில்: ரூ. 17 லட்சம் பணத்தை மோசடி செய்து விட்டு தப்ப முயன்ற தனியார் நிறுவன அதிகாரியை நடு ரோட்டில் வைத்து பெண்கள் சுற்றி வளைத்து அடித்து உதைத்தனர். விரைந்து வந்த போலீஸார் பெண்களின் பிடியிலிருந்து அந்த நபரை மீட்டனர்.
நாகர்கோவிலை அடுத்த கணபதிபுரத்தை சேர்ந்த சாவித்திரி என்பவர் நேற்று 40 பெண்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தார்.
அப்போது சாவித்திரி கூறுகையில், ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தில் மண்டல ஒருங்கிணைப்பாளராக 2006-ம் ஆண்டு முதல் பணி புரிந்து வந்தேன். அந்த நிறுவனத்தின் மூலம் நல உதவி வழங்குவதாக கூறியதன் பேரில் ஒவ்வொரு ஊரிலும் சபை தொடங்கி அதில் உறுப்பினர்களை சேர்த்து தலா ரூ.1,200 வீதம் வசூல் செய்து தலைமை பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்தேன்.
அவர்கள் நல உதவிகள் வழங்குவதாக கூறி ரூ.17 லட்சத்து 4 ஆயிரத்து 37-ஐ பெற்றுக்கொண்டு, இதுவரை நல உதவிகள் வழங்காததால் பணத்தை செலுத்தியவர்கள் என்னிடம் கேட்கிறார்கள்.
ஆகவே பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றிய 3 பேர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளேன்'' என்று கூறினார்.
இந்த நிலையில் அந்த நிறுவன நிர்வாகிகளில் ஒருவர் நாகர்கோவில் டெர்ரிக் சந்திப்பு அருகே இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே அந்த பெண்கள் டெர்ரிக் சந்திப்புக்கு விரைந்து சென்று அங்கு நின்று கொண்டு இருந்த நிர்வாகி ஆதிலிங்கத்தை முற்றுகையிட்டனர்.
ஆதிலிங்கத்தை சரமாரியாக தாக்கினர். ஏகப்பட்ட பெண்கள் ஒரு ஆணை சுற்றி வளைத்து அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸாருக்குத் தகவல் போய் விரைந்து வந்தனர்.
ஆவேசத்துடன் காணப்பட்ட பெண்கள் கூட்டத்தில் இருந்து ஆதிலிங்கத்தை மீட்டனர்.
பின்னர் ஆதிலிங்கம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண்கள் சாலை மறியலில் குதித்தனர்.
அப்போது ஆதிலிங்கத்தை போலீசார் ஒரு ஆட்டோவில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்ல முற்பட்டனர். அதைப் பார்த்த பெண்கள் ஆட்டோவை போக விடாமல் தடுத்து மறித்தனர்.
இதையடுத்து போலீஸ் நிலையம் வரை ஆதிலிங்கத்தை போலீசார் நடக்க வைத்து கூட்டிச் சென்றனர்.
பின்னர் 25 பெண்களைக் கைது செய்தனர். அதேசமயம், காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆதி லிங்கத்திடம் என்ன நடந்தது என்று கேட்டு எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி விட்டனர்.
சம்பந்தப்பட்ட ஆதி லிங்கத்தின் மனைவி தூத்துக்குடியில், தலைமைக் காவலராக இருக்கிறாராம்.