சிறார்களை மனித வெடிகுண்டுகளாக்கும் தலிபான்கள்!
இஸ்லாமாபாத்: தலிபான் தீவிரவாதிகள், சிறுவர்களைப் பிடித்து அவர்களை மனித வெடிகுண்டுகளாக செயல்பட பயிற்சி அளித்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் இருக்கும் தலிபான்களின் தலைவரான பைதுல்லா மசூத்தான் இதற்காக சிறார்களைப் பிடித்து தலிபான்களுக்கு சப்ளை செய்து வருகிறாராம்.
பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இத்தகவலை வெளியிட்டுள்ளனர்.
பைதுல்லா மசூத், தாக்குதல்களில் அதிக அளவிலான சிறார்களை ஈடுபடுத்துவதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ ஆதாரம் ஒன்றையும் பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ளது.
அதில், மனித வெடிகுண்டுகளாக செயல்பட தேர்வு செய்யப்பட்டுள்ள சிறார்களுக்குப் பயிற்சி அளிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
குழந்தைகளைத் தேர்வு செய்து, அவற்றுக்கு பயிற்சி அளித்து ஒவ்வொரு குழந்தையையும் 6000 டாலர் முதல் 12 ஆயிரம் டாலர் வரை விற்கிறார்களாம்.
இப்படிப் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படும் குழந்தைகளுக்கு அதிகபட்ச வயதே 11 தான் என்பதுதான் இதில் கொடுமையானது.
தாக்குல் நடத்தத் திட்டமிடும் இடங்களுக்கு சிறுவர்களை குண்டுகளுடன் அனுப்பினால் யாரும் சந்தேகப்பட மாட்டார்கள் என்பதால் இந்தக் கொடிய திட்டத்தை அமல்படுத்தி வருகிறார் மசூத்.
மசூதைப் பிடிக்கும் நடவடிக்கைகளை தற்போது பாகிஸ்தான் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்க படைகளும் மறுபக்கம் ஆப்கானிஸ்தானில் இருந்தபடி மசூதைப் பிடிக்க முயன்று வருகின்றன.