ஸ்வைன் ப்ளூ-சமாளிக்க ரூ.5,000 கோடி தேவை-ஐநா
ஸ்வைன் ப்ளூ எனப்படும் பன்றி காய்ச்சல் உலகம் முழுவதும் தொற்றி வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கு படி இதுவரை 429 பேர் இந்த நோய்க்கு பலியாகி இருக்கிறார்கள். சுமார் 94 ஆயிரம் பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கணக்கில் வந்தது. ஆனால், இதைவிட அதிகம் பேருக்கு இந்த நோய் தொற்று இருக்கும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.
இந்நிலையில் கடந்த மாதம் இந்த நோயை ஆட்கொள்ளி நோயாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ள நிலையில் இதன் பாதிப்பு வளர்ந்து வரும் நாடுகளில் படுமோசமாக இருக்கும் என ஐநா தெரிவித்துள்ளது.
தற்போது ஸ்வைன் எங்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இதனால் வளர்ந்த நாடுகளில் மக்கள் ஊசி, மருந்து எதுவுமின்றி சாதாரணமாகவே குணமாகிவிடுகிறார்கள்.
ஆனால், ஏற்கனவே எய்ட்ஸ், மலேரியா, டிபி, நிமோனியா போன்ற நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கும் வளரும் நாடுகளில் ஸ்வைன் ப்ளூ பரவினால் நிலைமை மகா மோசமாகிவிடும் என உலக சுகாதார மைய தலைவர் மார்கெரட் சான் தெரிவித்துள்ளார்.
5 சதவீதம் பேருக்கு மருந்து...
அவர் மேலும் கூறுகையில்,
உலகம் முழுவதும் சுமார் 49 வளர்ச்சி குறைந்த நாடுகளில் ஸ்வைன் ப்ளூவுக்கான மருந்துகள் சுத்தமாக இல்லை. வளர்ந்து வரும் நாடுகளில் பல போதிய சுகாதார முறைகளை கையாள்வதில்லை. அவர்கள் எந்த பாதுகாப்பும் இல்லாமல் வெறுங்கையுடன் தான் ஸ்வைன் ப்ளூவை எதிர்கொண்டு வருகிறார்கள்.
அவர்களிடம் வைரஸ் எதிர்ப்பு மருந்துகள், தடுப்பூசிகள் என எதுவும் இல்லை. பிரி்ட்டன், கனடா மற்றும் பிரான்ஸ் போன்ற ஒரு சில நாடுகளிடம் மட்டும் தான் நாட்டு மக்கள் அனைவருக்கும் தேவையான அளவு ஸ்வைன் ப்ளூவுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் டாமிப்ளூ மருந்துகள் இருக்கிறது.
எங்களிடமும் மருந்து கொஞ்சம் தான் கையிருப்பு இருக்கிறது. இதனால் பல மருந்து நிறுவனங்களிடம் ஏழை நாடுகளுக்காக ஸ்வைன் ப்ளூ மருந்தை ஒதுக்கி வைக்குமாறு கேட்டுள்ளோம். ஒரு நாட்டு மக்கள் தொகையில் 5 சதவீத அளவுக்கு ஸ்வைன் ப்ளூ மருந்து வைத்திருப்பது போதுமானதாக இருக்கும் என கருதுகிறோம்.
ஸ்வைன் ப்ளூ தாக்குதல் மோசமாக இருக்கும் என்ற நினைப்புடன் திட்டமிட்டு வருகிறோம். அதே நேரத்தில் அவை குறைய வேண்டு்ம் என நம்புகிறோம்.
இது குறித்து ஐநா பொது செயலாளர் பான் கி மூன் கூறுகையில், ஏழை மக்களை ஸ்வைன் ப்ளூ நோயில் இருந்து காக்க ஐநாவுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. நாங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து போதிய பணம் கிடைக்கவில்லை. இருந்தாலும் அனைத்து வருமான ஆதாரங்கள் மூலம் முயன்று கொண்டிருக்கிறோம் என்றார் பான் கி மூன்.