தமிழக கடலோரப் பகுதி பாதுகாப்பாக உள்ளது-ப.சி
சென்னையில் நேற்று இரவு போலீஸார் நடத்திய வரலாறு காணாத பாதுகாப்பு ஒத்திகை இன்று ராஜ்யசபாவில் எதிரொலித்தது.
அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய ப.சிதம்பரம், மாநில அரசுகளுடன், உளவுத் துறை தகவல்களை மத்திய உள்துறை தொடர்ந்து பரிமாறிக் கொள்கிறது. அதேபோலத்தான் தமிழக காவல்துறையுடனும் உளவுத் தகவல்களைப் பரிமாறிக் கொள்கிறோம். கடந்த மாதம் கூட உளவுத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் ஊடுறுவாமல் தடுப்பதற்காக தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பன்மடங்கு பெருக்கப்பட்டுள்ளது. கடலோர காவல் நிலையங்கள், ரோந்துப் பணிகள், சோதனைச் சாவடிகள் என தமிழக போலீஸார் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் தீவிரவாத ஊடுறுவல் கடல் மார்க்கமாக ஏற்படாதபடி தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவின் தமிழக கடலோரப் பகுதி மிகவும் பாதுகாப்பாக இருப்பதை நான் மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் கடலோரக் கண்காணிப்பு தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றார் ப.சிதம்பரம்.