புலிகள் ஊடுறுவலை தடுக்க கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு
ராமேஸ்வரம்: விடுதலைப் புலிகள் ஊடுறுவல் இடம் பெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பும், தேடுதல் வேட்டையும் நடைபெற்று வருகின்றன.
ராமேஸ்வரம் கடலோரப் பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் உள்ளூர் போலீஸார், கியூ பிரிவு போலீஸார், கடலோரப் பாதுகாப்புப் படை போலீஸார் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
சென்னை முதல் தமிழகத்தின் அனைத்துக் கடலோரப் பகுதிகளிலும் இந்த தேடுதல் வேட்டை நடந்தது. கடலோர மாவட்டங்களில் இரவு நேர ரோந்தும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறையின் உத்தரவின் பேரில் இந்த தேடுதல் வேட்டை நடந்துள்ளது.
தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் மெட்டல் டிடெக்டர் கருவிகளைக் கொண்டும், மோப்ப நாய்கள் சகிதமும் போலீஸார் தீவிர வேட்டை நடத்தினர். அங்குள்ள காட்டுப் பகுதியிலும் தேடுதல் வேட்டை நடந்தது.
அதேபோல மன்னார் வளைகுடாப் பகுதியில் உள்ள முயல் தீவிலும் தேடுதல் வேட்டை நடந்துள்ளது.
இன்று இரவு வரை தேடுதல் வேட்டை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.