டாக்டர்களுக்கு கமிஷன் தரும் ஸ்கேன் மையங்கள்
சென்னை: தனியார் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மையங்கள் அதிகமான கட்டணம் வசூலிப்பதோடு தங்களுக்கு பிஸினஸ் பிடிக்க டாக்டர்களுக்கு 50 சதவீதம் கமிஷன் மற்றும் தங்க நாணயங்களை வழங்கி வருவதாக சட்டசபையில் குற்றம் சாட்டப்பட்டது.
சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில்,
தனியார் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மையங்களில் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது போன்ற மையங்களில் இருந்து டாக்டர்களுக்கு 50 சதவீதம் கமிஷன் வழங்கப்படுவதாகவும், தங்க நாணயங்கள் போன்ற பரிசுப் பொருட்கள் கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,
எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவிகளை அதிக விலை கொடுத்து வாங்குவதால் ஸ்கேன் மையங்கள் மக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கின்றன. இதை அரசு கட்டுப்படுத்த முடியாது.
ஆனாலும் அரசு பொது மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க ரூ.2,500 தான் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதன் காரணமாக தனியார் மையங்களில் ரூ. 10,000 அளவுக்கு இருந்த கட்டணம் அதிலிருந்து தற்போது சுமார் ரூ. 3,000 ஆகக் குறைந்துள்ளது.
அவர்கள் அதிக கட்டணம் வசூலிக்கிறார்களா என்பது பற்றி கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். டாக்டர்களும் கண்காணிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவிகளை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.