திருவண்ணாமலை கிரிவல பாதையி்ல கண்காணிப்பு கோபுரம்-எஸ்பி
திருவண்ணாமலை: கிரிவலத்தின் போது வழி தவறி உறவினர்களை பிரிந்து நிற்கும் பக்தர்களை உடனடியாக கண்டுபிடிக்க 56 இடங்களில் உயர் கோபுர விளக்குகளும், சுமார் 28 கண்காணிப்பு கோபுரங்கள் நிறுவப்படும் என மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி அன்று சுமார் 5 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கின்றனர். கூட்டம் அதிகமாக இருப்பதால் பல சமயங்களில் பக்தர்கள் சிலர் வழி தவறி, தங்களது குடும்பத்தினரை பிரிந்து விடுகின்றனர். அவர்களை தேடி கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது.
பக்தர்களின் இந்த பிரச்சனையை தீர்க்க 14 கிமீ., தூரமுள்ள கிரிவல பாதையில் அரை கிமீ., ஒன்றுக்கு என்ற விதம் சுமார் 28 கண்காணிப்பு கோபுரங்களை நிறுவ திட்டமிட்டுள்ளோம்.
ஒவ்வொரு கண்காணிப்பு கோபுரத்துக்கு ஒரு நம்பர் கொடுக்கப்படும். உறவினர்களை பிரிந்தவர்கள் அங்கு சென்று போலீசாரிடம் புகார் கொடுத்தால், அவர்கள் அருகிலிருக்கும் கண்காணிப்பு கோபுரத்துக்கு தகவல் கொடுத்து உறவினர்களுடன் சேர்த்து வைப்பார்கள்.
அதே போல் கிரிவல பாதையில் போதிய வெளிச்சமில்லை என்ற பக்தர்களின் குறையும் தீர்த்து வைக்கப்படும். இதற்காக 56 இடங்களில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்படும் என்றார் அவர்.