'கல்லி' கிரிக்கெட்-வீரர்களுக்கு பிசிசிஐ எச்சரிக்கை
டெல்லி: பிசிசிஐயின் அனுமதி பெறாத 'டென்-10 கல்லி கிரிக்கெட்' தொடர் உள்ளிட்ட உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய வீரர்கள் கலந்து கொள்ளக்கூடாது என பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு (பிசிசிஐ)போட்டியாக கபில் தேவ் தலைமையில் ஐசிஎல் அமைப்பு துவக்கப்பட்டது. இந்த அமைப்புக்கு பிசிசிஐ அனுமதி அளிக்காத நிலையில் அதில் இணைந்து விளையாடிய வீரர்கள் மீது பிசிசிஐ தடை விதித்தது. வீரர்கள் அந்த அமைப்பிலிருந்து வெளியேறியதை அடுத்து தற்போது அவர்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது கல்லி கிரிக்கெட் தொடர் என்ற பெயரில் 10 ஓவர்கள் கொண்ட போட்டி தொடர் ஒன்று நடக்கவிருக்கிறது. இதில் இந்திய வீரர்கள் பங்கேற்க கூடாது என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
மேலும் இத்தொடருக்கான அறிமுக விழாவில் பங்கேற்ற சந்தீப் பாட்டீல், மதன் லால், சபா கரீம் உள்ளிட்ட முன்னாள் வீரர்களை கடுமையாக எச்சரித்துள்ளது.
இது குறித்து பிசிசிஐ செயலர் ஸ்ரீனிவாசன் கூறுகையில்,
டென்-10 கல்லி கிரிக்கெட் தொடரை நடத்தும் அமைப்பு அதற்கு பிசிசிஐ அனுமதி கொடுத்துள்ளதாக கூறுவது உண்மை அல்ல. இந்திய அணியில் தற்போது விளையாடி வரும் வீரர்களோ அல்லது பிசிசிஐ உடன் தொடர்பில் இருக்கும் முன்னாள் இந்திய வீரர்களோ இத்தொடரில் பங்கேற்க கூடாது.
அதேநேரத்தில் அடுத்த சீசன் முதல் உள்ளூர் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொள்ளமாட்டார்கள். அவர்களுக்கு பதிலாக ஜசிஎல் அமைப்பில் இருந்து வெளியேறிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்றார் ஸ்ரீனிவாசன்.