டுவென்டி 20: சச்சின் லாயக்கில்லை-புச்சானன்
டெல்லி: ஐபிஎல் கொல்கத்தா அணியின் பயிற்சியாளப் பதவியிலிருந்து தூக்கப்பட்டவரும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான ஜான் புச்சானன், இந்திய கிரிக்கெட் வீரர்களை சரமாரியாக சாடி தனது புத்தகத்தில் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங்கை அவர் கடுமையாக சாடியுள்ளார். கங்குலியைப் போல தன்னை நினைத்துக் கொண்டு செயல்படுகிறார் யுவராஜ் சிங் என்று கூறியுள்ளார் புச்சானன்.
தி பியூச்சர் ஆப் கிரிக்கெட் - தி ரைஸ் ஆப் டுவென்டி 20 என்பதுதான் புச்சானன் எழுதியுள்ள புத்தகம். அதில், சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட வீரர்களையும், யுவராஜ் சிங் போன்றோரையும் கடுமையாக சாடியுள்ளார் புச்சானன்.
டுவென்டி 20க்கு சச்சின் லாயக்கில்லையாம்...
சச்சின் குறித்து அவர் எழுதுகையில், கிரிக்கெட்டில் மிகப் பெரிய வீரராக சச்சின் டெண்டுல்கர் வரலாற்றில் இடம் பெறுவார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் டுவென்டி 20 போட்டிகளில் விளையாடும் அளவுக்கு அவர் தகுதியானவர் என்று எனக்குத் தெரியவில்லை.
டுவென்டி 20 போட்டிக்கான உடல் தகுதியோ, புத்திசாலித்தனமோ, திறமையோ அவரிடம் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
டுவென்டி 20 போட்டிகளில் பந்து வீச்சாளர்களைப் பார்த்து பேட்ஸ்மேன் பயப்படாமல் விளையாட வேண்டும். கிரியேட்டிவ் பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டும். ஆனால் அதெல்லாம் சச்சினிடம் இருப்பதாக தெரியவில்லை.
ஒரு நாள், டெஸ்ட் போட்டிகளில் வேண்டுமானால் சச்சின் பெரிய வீரராக இருக்கலாம். ஆனால் நிச்சயம் டுவென்டி 20 போட்டிகளுக்கு அவர் லாயக்கில்லை.
யுவராஜுக்கு கங்குலின்னு நினைப்பு ..
தன்னை கங்குலி போல பாவித்துக் கொள்கிறார் யுவராஜ் சிங். ஆனால் கங்குலியிடம் உள்ள கவர்ச்சி, திறமை யுவராஜிடம் சுத்தமாக இல்லை.
ஹர்பஜன் சிங்..
பிரச்சினைகளை உருவாக்கி, அதைப் பற்றி எரிய வைப்பதில் கில்லாடி ஹர்பஜன் சிங். ஆனால் அதுவே அவரை நோக்கித் திரும்பும்போது சமாளிக்க முடியாமல் சிரமப்படுகிறார்.
சைமன்ட்ஸ், ஹர்பஜன் சிங் இடையிலான மோதல் இதன் வெளி்ப்பாடுதான். மற்றவர்களின் பிரச்சினையை ஊதி விடுபவர், தனக்கே பிரச்சினை வந்தபோது அதை சமாளிக்க முடியாமல் தவித்தார்.
கெவின் பீட்டர்சன், சோயிப் அக்தர் ஆகியோரையும் விளாசித் தள்ளியுள்ளார் புச்சானன்.
ஆனால் கங்குலியை மட்டும் புகழ்ந்து தள்ளியுள்ளார். கங்குலி சிறந்த வீரர். தலைமைத்துவம் அதிகம் கொண்டவர். கவர்ச்சிகரமான வீரர். அவரை இயான் சேப்பலுடன் ஒப்பிடலாம் என்று கூறியுள்ளார் புச்சானன்.
சுதந்திரம் கொடுக்காத மல்லையா...
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் உரிமையாளரான விஜய் மல்லையாவையும் அவர் விடவில்லை.
வீரர்களை சுதந்திரமாக விளையாட அனுமதிக்காதவர் மல்லையா. அதேபோல பயிற்சியாளர்களையும் அவர் சுதந்திரமாக செயல்பட விடமாட்டார் என்று கூறியுள்ளார் புச்சானன்.
ஏன் இப்படி சகட்டுமேனிக்கு அனைவரையும் விமர்சித்துள்ளீர்கள் என்ற கேள்விக்கு, கிரிக்கெட் உலகின் தற்போதைய நிலவரம் குறித்துதான் நான் எழுதியுள்ளேன். என்னை விமர்சிப்பதற்கு முன்பு எனது எழுத்துக்களை முழுமையாக படித்துப் பார்க்க வேண்டுகிறேன்.
எனது எழுத்துக்களைப் படித்தால் நான் இந்திய அணிக்கு ஆதரவாகத்தான் எழுதியுள்ளேன் என்பது புரியும். இந்தியா தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறது, எப்படி கிரிக்கெட்டை புரிந்து வைத்துக் கொண்டுள்ளது என்பதைத்தான் நான் சொல்லியுள்ளேன் என்கிறார் புச்சானன்.
தனது நூலில் ஐபிஎல் 2 போட்டி குறித்தும் சில விஷயங்களைக் கூறியுள்ளார் புச்சானன்.
ஜெய்ப்பூர் மற்றும் பஞ்சாப் அணிகள் தவிர மற்ற எந்த ஐபிஎல் அணிக்கும், 2வது வீரர் ஏலம் குறித்து தெரிவிக்கப்படவே இல்லை.
கொல்கத்தா அணிக்காக முதல் ஏலத்திற்கு மட்டும் நாங்கள் 1 லட்சத்து 7 ஆயிரம் டாலர் பணத்தை செலவழித்தோம். ஆனால் பஞ்சாப் அணியோ, ஜெய்ப்பூர் அணியோ பணத்தை செலவழிக்காமல் இருந்தனர். அது ஏன்?
சில நாட்களில் 2வது ஏலம் நடந்தது. ஆனால் அதுகுறித்து பஞ்சாப், ஜெய்ப்பூர் அணிகளைத் தவிர மற்றவர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார் புச்சானன்.