அமெரிக்க நதியைப் போல சீராக்கப்படவுள்ள கூவம்!
சென்னை: அமெரிக்காவில் சென்தானியா நதி நாசமடைந்து சீரமைக்கப்பட்டது போல கூவம் ஆற்றையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொதுபப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது சென்னை கொருக்குப்பேட்டை, கண்ணகிநகர் பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாயை தூர்வாரி தடுப்புச் சுவர் கட்டப்படுமா, மழைக் காலங்களில் வடசென்னை தண்ணீரில் மிதக்கிறது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா, கூவம் ஆறு சீரமைக்கப்படுமா என்று கேள்விகள் எழுப்பப்பட்டன.
இதற்கு பதிலளித்த துரைமுருகன்,
ஜவஹர்லால் நேரு நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பக்கிங்காம் கால்வாயை தூர்வாரி தடுப்புச்சுவர் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோல சென்னை நகரில் மழைநீர் காலங்களில் தண்ணீர் தேங்காமல் தடுக்கவும் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்கு மத்திய அரசின் கண்காணிப்பு மற்றும் ஒப்புதல் குழு அனுமதி வழங்கி இருக்கிறது. ஒப்புதல் பெறுவது வேறு, நிதி ஆதாரங்களை திரட்டுவது வேறு. இந்தத் திட்டத்துக்காக ரூ. 1,447 கோடி உலக வங்கி மற்றும் நபார்டு வங்கி மூலம் திரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில் ரூ. 631 கோடியிலான பணிகளை பொதுப்பணித்துறை நிறைவேற்றும். மீதமுள்ள பணிகள் சென்னை மாநகராட்சியால் செய்யப்படும்.
மழை காலங்களில் மாதவரம், ரெட்டேரி பகுதியில் இருந்துவரும் தண்ணீரால் கேப்டன் கால்வாய் நிரம்பி விடுவதால் வியாசார்பாடி மற்றும் வடசென்னை பகுதி தண்ணீரில் மிதக்கும் நிலை ஏற்படுகிறது. முன்பு பெருமளவில் தண்ணீர் தேங்கியது. தற்போது சிறிதளவுதான் பிரச்சனை இருந்து வருகிறது.
இதைச் சரி செய்யும் வகையில் ரூ. 6 கோடி வரை நிதி ஒதுக்கி பக்கிங்காம் கால்வாய் தூர்வாரப்பட்டு வருகிறது. புதிய திட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு தண்ணீர் தேங்கும் பிரச்சசனை வராது.
கூவம் ஆற்றை சீரமைக்கவும் 69 நீர் வழிப் பாதைகளை செம்மைப்படுத்தவும் உலக வங்கியில் இருந்து நிதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கூவம் ஆற்றை சீரமைக்கும் பணியில் அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக தனி அதிகாரி நியமிக்கப்பட்டு தனி அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள சென்தானியா நதி கூவம் நதியைப் போல் நாசமடைந்து பின்னர் சீரமைக்கப்பட்டுள்ளது. அதை அரசு சார்பில் ஒரு குழுவினர் சென்று பார்த்து வந்துள்ளனர். அவர்கள் அறிக்கையும் தயாராக உள்ளது. அதன்படி கூவம் ஆற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதில் அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது என்றார்.
மாநகராட்சிக்கு புதிய கட்டடம்:
இதற்கிடையே சென்னை மாநகராட்சி அலுவலகங்கள் செயல்பட்டு வரும் ரிப்பன் மாளிகை 1913ல் கட்டப்பட்டது. நூறு வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரிப்பன் மாளிகை சிதிலம் அடைந்துவிட்டது.
இதையும் இதன் அருகில் உள்ள விக்டோரியா ஹாலையும் புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரிப்பன் மாளிகை ரூ.18 கோடி செலவிலும், விக்டோரியா ஹால் ரூ.4.5 கோடி செலவிலும் புதுப்பிக்கப்படவுள்ளன.
இந் நிலையில் மாநகராட்சி அலுவலகங்கள் செயல்பட ரிப்பன் மாளிகையின் பின்புறம் 6 மாடி கட்டிடம் கட்டப்படுகிறது. இந்த பணிகள் முடிந்ததும் மாநகராட்சி அலுவலகங்கள் நிரந்தரமாகவே அங்கு மாற்றப்படும். அதன் பிறகு புதுப்பிக்கும் பணிகள் தொடங்கவுள்ளன.