தமிழக சாப்ட்வேர் ஏற்றுமதி 29% வளர்ச்சி
இந்திய சாப்ட்வேர் தொழில்நுட்ப பூங்காவின் (எஸ்டிபிஐ) இயக்குனர் பார்த்தசாரதி கூறுகையில்,
தமிழகத்தில் 2006-07ம் ஆண்டில் ரூ.28,426 கோடியாக இருந்த சாப்ட்வேர் ஏற்றுமதி, கடந்த ஆண்டில் ரூ.36,680 கோடியாக உயர்ந்துள்ளது. இது 29 சதவீதம் அதிகமாகும்.
அதே நேரத்தில் கர்நாடகத்தின் சாப்ட்வேர் ஏற்றுமதி 15 சதவீதம் மட்டுமே அதிகரித்துளளது. ஆந்திராவின் ஏற்றுமதி 24.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான சாப்ட்வேர் நிறுவனங்களைக் கொண்ட கர்நாடகத்தின் மொத்த ஏற்றுமதி கடந்த ஆண்டு ரூ.67,500 கோடியாக இருந்தது. ஆந்திராவின் ஏற்றுமதி ரூ. 32,509 கோடியாகும்.
ஆந்திராவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இருந்த தமிழகம் இப்போது இரண்டாவது இடத்தைப் பிடித்துவிட்டது.
அதேபோல 2006-07ம் ஆண்டில் தமிழகத்தில் ஐ.டி. துறையில் வேலைவாய்ப்புகள் 2.44 லட்சமாக இருந்தன. 2007-08ம் ஆண்டில் இது 2.85 லட்சமாக உயர்ந்துள்ளது.
உலகளவில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையிலும் இந்த வளர்ச்சியைக் காட்டியுள்ளது தமிழகம்.
அதே போல ஹார்டுவேர் துறை ஏற்றுமதி ரூ.261 கோடியில் இருந்து, ரூ.263 கோடியாக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் கால்சென்டர் துறையின் வளர்ச்சி குறைந்துள்ளது. இதன் ஏற்றுமதி வெறும் 1 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு ஐடி, கால்சென்டர்கள், ஹார்ட்வேர் துறை மூலம் தமிழகத்துக்கு ரூ. 6,102.43 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
அதே போல புதுச்சேரியின் சாப்ட்வேர் ஏற்றுமதி கடந்த ஆண்டு 78.65 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் ரூ. 63.98 கோடியாக இருந்தது.
தமிழகம்-புதுச்சேரியிலிருந்து ஏற்றுமதியாகும் சாப்ட்வேரில் 56 சதவீதம் அமெரிக்காவுக்கும், 12 சதவீதம் இங்கிலாந்துக்கும், மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு 6 சதவீதமுமாக உள்ளது. மற்ற நாடுகளுக்கு 12 சதவீதம் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த ஆண்டுடன் தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது. இதில் படித்து வெளியேறும் மாணவர்களில் சிறிய சதவீதத்தினர் மட்டுமே வேலைவாய்ப்பை பெறுகின்றனர். மற்றவர்களுக்கு வேலைகள் கிடைப்பதில்லை.
இதைக் கருத்தில் கொண்டு படித்துவிட்டு வெளியேறும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பெறும் வகையில், 'பினிசிங் ஸ்கூல்களை' அறிமுகம் செய்ய உள்ளோம்.
சாப்ட்வேர் என்ஜினீயரிங் துறையில் அமெரிக்கா, பிரிட்டன் தவிர ஆஸ்திரேலியா, நியூசிலாந்திலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன என்றார்.