திமுக மாஜி அமைச்சர் ராஜாவுக்கு எதிராக மக்கள் போராட்டம்
ஈரோடு: 15க்கும் மேற்பட்ட குடும்பங்களை இடத்தை காலி செய்யுமாறு முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜாவின் ஆட்கள் மிரட்டியதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
ஈரோடு கவுந்தப்பாடி அருகே உள்ளது எல்லீஸ் பேட்டை.
இங்கு பல ஆண்டுகளாக 15-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலத்தை, தற்போது முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. .
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா - வின் ஆட்கள் அப் பகுதியில் உள்ள மக்கள் வசிக்கும் இடத்தை காலி செய்யுமாறு அச்சறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால், ஆவேசம் அடைந்த அப் பகுதி மக்கள் என்.கே.கே.பி. ராஜாவும், அவரது ஆட்களும் தங்களை மிரட்டுவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து, அப்பகுதி மக்களுடன் முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் அவர்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு
செய்து தருவதாக உத்தரவாதம் அளித்துள்ளார். ஆனால் இது வரை எந்த வித மாற்று ஏற்பாடும் செய்து தரவில்லை என்று கூறப்படுகின்றது.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள், கவுந்தபாடி சாலையில் முன்னாள் அமைச்சர் என்.கே.கே. பி. ராஜாவின் கல்லூரிக்கு அருகில் சாலையோரத்தில் சமையல்
செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இத்திற்கு விரைந்து சென்று பொது மக்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இதனையடுத்து பொது மக்கள் கலைந்து
சென்றனர்.
திங்கள் கிழமைக்குள் இந்த பிரச்சனையில் உரியநடவடிக்கை எடுக்காவிட்டால், சாலையின் நடுவில் உட்கார்ந்து சமையல் செய்யும் போராட்டத்தில் ஈடுபடபோவதாக
எச்சரித்துள்ளனர்.
ஏற்கனவே ஒரு குடும்பத்துக்குச் சொந்தமான இடத்தை ராஜா அபகரிக்க முயன்றாகவும், அந்தக் குடும்பத்தினரை கடத்திச் சென்று மிரட்டியதாகவும் பெரும் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த சர்ச்சையால்தான் ராஜாவின் பதவி பறிக்கப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.