வீராசாமி வழக்கு-வைகோ கோர்ட்டில் ஆஜர்
சென்னை: அவதூறு வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினார்.
இயக்குநர் பாரதிராஜாவின் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் முதல்வர் கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் நடந்ததாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசினார். இதையடுத்து அவர் மீது சென்னை எழும்பூர் தலைமை மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
கருணாநிதி சார்பில் இந்த வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகும்படி வைகோவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இதன் பேரில் நேற்று காலை 10.30 மணிக்கு கோர்ட்டில் வைகோ ஆஜரானார். மாஜிஸ்திரேட்டு சேதுமாதவன் வழக்கு விசாரணையை நடத்தினார். கோர்ட்டில் வைகோவுக்கு வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.
பின்னர் வழக்கு விசாரணை வருகிற 14-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
பின்னர் வெளியில் வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அரசியல் பழி வாங்கும் நோக்கத்தோடு இந்த வழக்கு என் மீது போடப்பட்டுள்ளது. இப்போது ஒரு குடும்பத்திடம் சிக்கி, ஆட்சி சீரழிகிறது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்குகளை விலை கொடுத்து வாங்கி ஆளுங்கட்சி வெற்றி பெற்றது. இந்த நிலை நீடிக்காது. ஊழலில் திரட்டப்பட்ட பணத்தை கொடுத்து தான் ஓட்டு கேட்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ளும்போது, பண வெள்ளத்தை தாண்டி மக்கள் வெள்ளம் தீர்ப்பளிக்கும். அந்த காலம் வரத்தான் போகிறது என்றார் வைகோ.