இந்து கடவுள் அவமானம்-மன்னி்ப்பு கேட்டது பர்கர் நிறுவனம்
பர்கர் வகை ரொட்டிகளை தயாரித்து உலக முழுவதும் 70 நாடுகளில் விற்பனை செய்து வருகிறது பர்கர் கிங் கார்ப்பரேஷன் எனப்படும் அமெரிக்க நிறுவனம்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஸ்பெயினில் உள்ள இந்த நிறுவனத்தினர் தங்களது கடையின் வெளிபுறத்தில் வெளியிட்ட விளம்பரம் ஒன்று இந்துக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த விளம்பரத்தில் இந்து கடவுளான மகாலட்சுமி, ஆட்டு இறைச்சியால் செய்யப்பட்ட பர்கர் ஒன்றின் மீது அமர்ந்திருப்பதை போல் அச்சடிக்கப்பட்டிருந்தது. மேலும், அந்த படத்தின் கீழ் புனித உணவு என்ற வாசகம் இருந்தது.
இது அங்கிருக்கும் இந்துக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த செய்தி உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் மத்தியில் வேகமாக பரவியது.
இதையடுத்து அமெரிக்காவில் உள்ள இந்து பவுன்டேஷன் அமைப்பு அந்த நிறுவனத்தை சராமரியாக தாக்கி அறிக்கை விடுத்தது. அந்த நிறுவனம் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும், அந்த விளம்பரத்தை உடனடியாக நீக்க வேண்டும் என கோரியது.
இந்நிலையில் பர்கர் கிங் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் டென்சி டி வில்சன் கூறுகையில்,
நாங்கள் யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அப்படி விளம்பரம் செய்யவில்லை. இதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டு கொள்கிறோம்.
எங்கள் நிறுவனம் அனைத்து விருந்தினர்களின் மதிப்பையும், மரியாதையும் உணர்ந்தவர்கள். உள்ளூர் விற்பனையை கூட்டுவதற்காக இது போன்ற தெரியாமல் செய்துவிட்டனர். தற்போது அந்த விளம்பரங்கள் எடுக்கப்பட்டுவிட்டன என்றார்.