ராணிப்பேட்டையில் பேட்டரி கார் தொழிற்சாலை
ராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் 260 ஏக்கர் நிலப் பரப்பில் பொறியியல் துறைச்சார்ந்த சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது.
இங்கு 100 ஏக்கர் நிலப்பரப்பில் பவினா கார்ஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனம் ரூ.300 கோடி செலவில் மின்சாரக் கார்களைத் தயாரிக்க உள்ளது.
இந்தக் கார் தொழிற்சாலை மூலம் 1,500 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு கிடைக்கும். இந் நிறுவனம் வருடத்திற்கு 25,000 கார்களை தயாரிக்க அனுமதி பெற்றுள்ளது.
வரும் ஜனவரி 2011ல் வணிக ரீதியாக கார் உற்பத்தியைத் துவங்கவுள்ளது இந்த நிறுவனம். பேட்டரி மூலம் இயங்கும் இந்த கார் 5 இருக்கைகளுடன் இருக்கும்.
இதில் உள்ள சிறப்பம்சம், இந்தக் கார் ஓடும்போது அதிலிருந்து கிடைக்கும் 'பவரை' வைத்து அதன் பேட்டரி தன்னைத்தானே 'ரீ-சார்ஜ்' செய்து கொள்ளும் தொழில் நுட்பம் (On line recharge technology) கொண்டது.
இந்தப் புதிய கார் தொழிற்சாலை அமைக்கத் தேவையான 100 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யும் ஆணையை, துணை முதல்வர் ஸ்டாலின், பவினா கார் நிறுவனத்தின் தலைவர் ராஜசேகரிடம் இன்று வழங்கினார்.
நிகழ்ச்சியின் போது மாதிரிக் காரை ஸ்டாலின் ஓட்டிப் பார்த்தார்.