மாவோயிஸ்ட் வெறிச்செயல்-ஓரிசா வனத்துறை அலுவலகம் தகர்ப்பு
புவனேஸ்வர்: ஒரிசாவில் இன்று மாவோயிஸ்ட்டுகள் வனத்துறை அலுவலகம் ஒன்றை வெடித்து தகர்த்தனர். இதில் மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டது.
ஒரிசா மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் வெறிச்செயல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாவோயிஸ்ட் பிரிவுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து கோபமடைந்த அவர்கள் ஒரிசாவில் இன்று ஒரு நாள் பந்த் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் மாவோயிஸ்ட்கள் சுமார் 30 முதல் 40 பேர் கஜபதி மாவட்டத்தில் உள்ள அடாபா நகருக்கு அருகே இருக்கும் பனிகண்டா வனப்பகுதி அலுவலகத்துக்குள் நுழைந்தனர். அந்த அலுவலகத்தை சூறையாடினர். அங்கிருந்த மேஜை நாற்காலிகளை போட்டு உடைத்தனர்.
அதன் பின்னர் வெடிபொருளை பயன்படுத்தி அந்த அலுவலகத்தை தகர்த்தனர். அப்போது எதோ சத்தம் கேட்கிறதே என்று அந்த பக்கம் வந்த மூன்று பேர் காயமடைந்தனர்.
மேலும், மாவோயிஸ்ட்கள் கஞ்சம், கஜபதி, கந்தமால் ஆகிய மூன்று மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் போஸ்டர்கள் அடித்து ஒட்டியுள்ளனர்.
அதில் அரசு பலரை பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளது. மாவோயிஸ்ட் தீவிரவாதிகளாக நடத்தக்கூடாது. அவர்களை அரசியல் கைதிகளாக நினைக்க வேண்டும். எங்கள் மீதான தடை நீக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் மாவோயிஸ்ட் இன்று அறிவித்திருந்த பந்த், நகரங்களில் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால், கிராமங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.