கற்பழிப்பு வழக்கு-கவர்னர் காலில் விழுந்து கதறிய எம்எல்ஏ
ஆந்திர மாநிலம் கொவூர் தொகுதி தெலுங்கு தேசம் எம்எல்ஏ ராமாராவ். இவர் ஸ்புருகா என்ற பெயரில் நர்சிங் கல்லூரி ஒன்று நடத்தி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அந்த கல்லூரியை சேர்ந்த கேரள மாணவி ஒருவர் ராமாராவ் தன்னை கற்பழித்துவிட்டதாக குற்றம்சாட்டினார். மேலும் நான்கு கேரள மாணவிகள் அவர் தங்களை பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் தெரிவித்தனர்.
இது குறித்து அவர்கள் ஆந்திர உள்துறை அமைச்சர் சபிதா ரெட்டியிடம் புகார் கொடுத்தனர். இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் கல்லூரியில் விசாரணை நடத்தினர்.
சிபிசிஐடி போலீசார் விரைவில் விசாரணையை வெளியிட இருப்பதாகவும், அதன் பின்னர் ராமாராவ் கைது செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, எம்எல்ஏ ராமாராவ் உள்ளிட்டோர் ஆளுனர் என்டி திவாரியை சென்று சந்தித்தனர். அப்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்ட ராமாராவ், ஆளுனரின் காலில் விழுந்தார். தான் குற்றமற்றவன் என்றும், காங்கிரசார் தன் மீது வீண்பழி போடுவதாகவும், தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் அவர் ஆளுனரிடம் கேட்டு கொண்டார்.
இதை தொடர்ந்து சந்திரபாபு நாயுடு கட்சியின் சார்பில் அதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆளுனரிடம் மனு ஒன்றை கொடுத்தார்.
காங். போடும் நாடகம்-சந்திரபாபு...
பின்னர் சந்திரபாபு நாயுடு நிருபர்களிடம் பேசுகையில்,
ஆந்திர அரசு பணம் மற்றும் இது போன்ற பொய் குற்றச்சாட்டு மூலம் எதிர்கட்சியினரை முடக்க பார்க்கிறது. கேரள மாணவிகளை வைத்து கொண்டு காங்கிரஸ் ஆடும் நாடகம் இது. அவர்களுக்கு சிபிசிஐடி போலீசாரும் பக்கபலமாக இருக்கிறார்கள். ராமாராவ் எதிராக புகார் கொடுக்கும்படி அவர்களை காங்கிரஸ் தான் தூண்டிவிட்டுள்ளது என்றார்.