நிலேகனிக்கு பதில் யாரையும் நியமிப்பதாக இல்லை!- இன்போஸிஸ்
பெங்களூர்: மத்திய அரசின் பொது அடையாள அட்டை தயாரிப்புப் பணிக்குச் சென்று விட்ட இன்போஸிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனிக்கு பதில் வேறு யாரையும் அந்த பதவியில் நியமிக்கும் திட்டமில்லை என இன்போஸிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நந்தன் நிலேகனி இன்போஸிஸ் நிறுவனத்திலிருந்து விடைபெற்றுள்ளது நிச்சயம் பெரிய இடைவெளியை உண்டாக்கியிருக்கிறது.
உலகின் டாப் 100 சிஇஓக்களில் 60 பேருக்காவது அவரை நன்கு தெரியும். அத்தனை பிரபலமான நிர்வாகி அவர். ஆனாலும் அவரது சேவை நாட்டுக்கு தேவைப்படுவதால், நமக்கு வேறு வழியில்லை.
இப்போதைக்கு அவரது இடத்தில் வேறு ஒருவரை நியமிக்கும் யோசனை ஏதுமில்லை. அவரிடமிருந்த பொறுப்புகள் சக நிர்வாகிகளுக்கு பிரித்தளிக்கப்படுகிறது.
இதைச் சுமை எனக் கருதாமல் ஆர்வத்துடன் இலக்குகளை அடைய முன்னேறுவார்கள், என இன்போஸிஸ் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.