பெரியாறு அணை: கருணாநிதி, அச்சுதானந்தனை பேச வைக்க மத்திய அரசு முடிவு
டெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக, கேரள முதல்வர்களின் கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்யவுள்ளது.
இதுகுறித்த சூசக தகவலை நாடாளுமந்ற விவகாரத்துறை அமைச்சர் பி.கே.பன்சால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் இடையே விரிசல் அதிகமாகி வருகிறது. இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட் முன்பு இருந்தாலும், மத்திய அரசும், தன் பங்குக்கு, இரு மாநில முதல்வர்களை சந்தித்துப் பேச வைத்து பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்கப்படும்.
இரு மாநில அரசுகளின் கவலைகளும் நிவர்த்தி செய்யப்படும் என்றார்.
பெரியாறு அணைக்குப் பதில் புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளா பிடிவாதமாகவும், மும்முரமாகவம் இருந்து வருகிறது. சமீபத்தில் கேரள முதல்வர் அச்சுதானந்தன் டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து இரு மாநில முதல்வர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு கோரியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
இந்தப் பின்னணியில் பன்சால் கூறியிருப்பதைப் பார்க்கும்போது விரைவில் இரு மாநில முதல்வர்களின் கூட்டம் டெல்லியில் நடைபெறலாம் என்று தெரிகிறது.