5 சட்டசபைத் தொகுதிகளுக்கு ஆகஸ்ட்டில் இடை தேர்தல்?
இளையாங்குடி தொகுதி உறுப்பினர் ராஜ. கண்ணப்பன் பதவியை ராஜினாமா செய்து விட்டு அதிமுகவில் இணைந்து விட்டார்.
பர்கூர் அதிமுக எம்.எல்.ஏ. தம்பித்துரை, ராஜினாமா செய்து விட்டு எம்.பியாகி விட்டார்.
தொண்டாமுத்தூர் மதிமுக உறுப்பினர் கண்ணப்பன், ராஜினாமா செய்து விட்டு திமுகவுக்குப் போய் விட்டார்.
கம்பம் மதிமுக எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன் ராஜினாமா செய்து விட்டு திமுகவில் சேர்ந்து விட்டார்.
இந்த நிலையில், ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் செல்வராஜ் சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். இதையடுத்து ஐந்து தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது.
இந்தத் தொகுதிகளில் உடனடியாக இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ள தொகுதி இளையாங்குடி ஆகும்.
ராஜ. கண்ணப்பன் தனது உறுப்பினர் பதவியை பிப்ரவரி மாதம் 25-ம் தேதி ராஜினாமா செய்தார். ஒரு சட்டமன்ற உறுப்பினர், தனது பதவியை ராஜினாமா செய்த 6 மாதத்துக்குள் அங்கு தேர்தல் நடத்தி, புதிய உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். எனவே அங்கு ஆகஸ்ட் 24ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இதை கூறி தேர்தல் ஆணையத்திற்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி கடிதம் அனுப்பியுள்ளார்.
இளையாங்குடிக்கு மட்டும் தேர்தல் நடத்தாமல் காலியாக உள்ள மற்ற நான்கு தொகுதிகளுக்கும் சேர்த்தே தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
எனவே இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.