மும்பை நகை வியாபாரிக்கு திவால் நோட்டீஸ் - நெல்லை கடைக்காரர்கள் அதிர்ச்சி
சங்கரன்கோவில்: ரூ. 50 லட்சம் பணத்துடன் சென்ற மும்பை நகை வியாபாரி திவால் ஆகி விட்டதாக நோட்டீஸ் விடப்பட்டுள்ளதால், அவரிடம் பணத்தைக் கொடுத்த நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் நகைக் கடைக்காரர்கள் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மும்பையை சேர்ந்த நகை வியாபாரி வினோத். இவர் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் நகை வியாபாரிகளிடம் சென்னையில் இருந்து குறைந்த விலைக்கு நகை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதை நம்பி பலர் பணம் கொடுத்தனர். அவரும் கடந்த ஓன்றரை ஆண்டாக வியாபாரிகளுக்கு நம்பிக்கை தரும் வகையில் நகை வாங்கி கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஜூன் 21ல் 10 நகை வியாபாரிகளிடம் ரூ.50 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு சென்றவர் திரும்பி வரவில்லை. இதுகுறித்து வியாபாரிகள் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் அவரது நண்பர் தீபக் மற்றும் உறவினர்களிடம் வினோத்தை பிடித்து ஓப்படைக்குமாறு கூறினர். அவரை உத்திர பிரசேத மாநிலம் லக்னோவில் சென்னையை சேர்ந்த அவரது காதலி சமீலாவுடன் பிடித்தனர். பின்னர் வினோத்தை ரூ.1 லட்சம் பணத்துடன் சங்கரன்கோவிலுக்கு ரயிலி்ல் அழைத்து வந்தனர்.
காட்பாடி அருகே ரயில் வந்த போது வினோத் தப்பியோடினார். இந்நிலையில் வினோத் தரப்பில் கோவில்பட்டி நீதிமன்றத்தில் திவால் நோட்டீஸ் மனு செய்யப்பட்டது. இதனால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.