துவரம் பருப்பு கிலோ ரூ. 92-ரேஷனில் கூடுதலாக வழங்க கோரிக்கை
தமிழகத்தின் பிரத்யேக உணவு வகைகளில் சாம்பாருக்கு எப்போதும் தனி மதிப்பு. தமிழகத்துக்கும் வரும் வட இந்திய மற்றும் வெளிநாட்டு பயணிகள் ஊரை சுற்றி பார்க்கிறார்களோ... இல்லையோ. இட்லி, சட்னி, சாம்பாரை ஒரு பார்க்காமல் திரும்பி போகமாட்
சாம்பாருக்கு சுவை கூட்டும் துவரம் பருப்பின் விலை தாறுமாறாக எகிறி வருகிறது. கடந்த ஆண்டு இதே சமயத்தில் ரூ. 41க்கு விற்பனையான துவரம் பருப்பு. தற்போது ரூ. 51 அதிகரித்து ரூ. 92 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் சுமார் 125 சதவீதம் விலை அதிகரித்து இருப்பதால் மக்கள் அதிர்ச்சிக்கு ஆளாகி வருகின்றனர்.
மற்ற உணவு பொருட்களை விட துவரம் பருப்பின் விலை மட்டம் ஏன் இப்படி பல மடங்கு பெருகியுள்ளது என்பதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது.
முதலாவதாக, துவரம் பருப்பை தமிழர்கள் அதிகம் பயன்படுத்தினாலும், தமிழகத்தில் இவை குறைவாக விளைவிக்கின்றன. அதாவது நமது தேவையின் 12ல் 1 பங்கு தான் தமிழகத்தில் விளைகிறது. மற்றவை குஜராத் போன்ற வடமாநிலங்களில் இருந்தும், பர்மா, தான்சானியா போன்ற நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது.
7 லட்சம் டன் விளைச்சல் குறைவு...
இந்த ஆண்டு வட மாநிலங்களில் பருவ மழை பொய்த்து விட்டதால், அங்கு துவரம் பருப்பின் விலை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட அங்கு தற்போது 7 லட்சம் டன் துவரம் பருப்பு விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் பருப்பு தட்டுப்பாடு வந்துவிடும் என கருதி பல நிறுவனங்கள் அதை வாங்கி இருப்பு வைத்து கொள்ள கடுமையாக போட்டியிட்டு வருகின்றன.
பல மாநிலத்தை சேர்ந்த ரேஷன் கடைகளுக்கும் இருப்பு தேவைப்படுவதால் அம்மாநில அரசுகளும் துவரம் பருப்புகளை லாரி லாரியாக வாங்கி குவிக்கின்றனர்.
இவர்கள் வரிசையில் தற்போது தமிழ்நாடு அரசு நியமித்துள்ள 4 நிறுவனங்களும் சேர்ந்துள்ளன. இவர்கள் கூடுதல் விலைக்கு துவரம் பருப்புகளை வாங்கி குவிக்கின்றனர். அரசு மானியம் கிடைப்பதால் இவர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை பற்றி கொஞ்சமும் கவலையில்லாமல் பருப்புகள் விலையை ஏற்றி வருகின்றன.
இது குறித்து துவரம் பருப்பு உற்பத்தியாளர் ஒருவர் கூறுகையில்,
இந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தேவைக்கு அதிகமாக துவரம்பருப்பை கையிருப்பு வைத்திருக்கிறார்கள். 20 லாரிகளுக்கு மேல் வாங்குபவர்களுக்கு தான் இவர்கள் துவரம் பருப்பு தருகின்றனர். தற்போதிருக்கும் சூழ்நிலையில் கோடி கணக்கில் கொடுத்து துவரம் பருப்பு வங்க முடியவில்லை.
கடந்த சில மாதத்தில் மட்டும் துவரம் பருப்புகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தவர்கள் லாட்டரி அடிப்பதை விட அதிக மடங்கு சம்பாதித்துள்ளனர். நல்ல வேளையாக பர்மா, தான்சானியா ஆகிய பகுதிகளில் இருந்து தொடர்ந்து சப்ளை வந்து கொண்டிருக்கிறது. இல்லையென்றால் இதன் விலை ரூ. 200ஐ தாண்டியிருக்கும் என்றார்.
துவரம் பருப்பை தொடர்ந்து பாசிபருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றின் விலையும் அதிகரித்து வருகின்றன. ரூ. 50க்கு விற்பனையான உளுத்தம் பருப்பு தற்போது ரூ. 60க்கும், ரூ. 53க்கும் விலை போன பாசி பருப்பு தற்போது ரூ. 63 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இரண்டு மாதங்களுக்கு பின் குறையும் என கூறப்படுகிறது.
ரேஷனில் கூடுதலாக வழங்க வேண்டும்...
தற்போது ரேஷன் கடைகளில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ. 32க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு வழங்கப்படும் அளவு ஒரு வீட்டுக்கு ஒரு மாதத்துக்கு காணுவது இல்லை. இதனால் கூடுதலாக மூன்று கிலோ துவரம் பருப்புகள் வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விலை உயர்வு காரணமாக தற்போது தமிழகத்திலு உள்ள ஒரு சில சிறு ஹோட்டல்களில் இட்லி, தோசைக்கு சாம்பார் வைப்பதை நிறுத்திவிட்டனர். வெறும் சட்னி மட்டும் தான். சில ஹோட்டல்களில் ஒரு முறை மட்டுமே கொஞ்சம் சாம்பார் தரப்படுகிறது. அடுத்த முறை கேட்டால் கொஞ்சம் சட்னி தான் இருக்கு, வாங்கிட்டு போறீங்களா என்று வடிவேலு ஸ்டைலில் கேட்கிறார்கள்.