போலி அடையாள அட்டை-நிலேகனி எச்சரிக்கை
பெங்களூர்: நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவான அடையாள அட்டை உருவாக்குவதன் மூலம் பெரிய திட்டங்களை சிறப்பாக, அனைவருக்கும் பலனளிக்கும் வகையில் செயல்படுத்த முடியும் என்றார் நந்தன் நிலேகனி. அதே நேரம் போலி அடையாள அட்டைகள் தயாரிக்க முடியாத அளவுக்கு மிகுந்த எச்சரிக்கையுடன் இந்த அட்டைகள் தயாரிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை உருவாக்கும் திட்டத்தைச் செயல்படுத்தவிருக்கும் நந்தன் நிலேகனி, இன்று பெங்களூரில் முதல்வர் எடியூரப்பாவைச் சந்தித்தார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், "இந்தத் திட்டத்துக்காக முழுமையான ஒரு டேட்டா பேஸை தயாரிக்க வேண்டியுள்ளது. நாட்டு மக்களின் முழு விவரமும் இந்த தொகுப்புக்குள் அடங்கிவிடும். இந்த விவரங்கள் இருந்தால் போதும்... எந்தத் திட்டமாக இருந்தாலும் மக்கள் அனைவருக்கும் முழுமையாகப் பலனளிக்கும் வகையில் செயல்படுத்த முடியும்.
இன்று பொதுவான அடையாள அட்டை உருவாக்குவதில் உள்ள சவால், போலிகள் பெருகாமல் பார்த்துக் கொள்வதுதான். விரல் ரேகை போன்ற சில நுணுக்கமான விஷயங்களை உள்ளடக்கியதாக இந்த அடையாள அட்டை தயாரிக்கப்படும், என்றார்.
எத்தனை காலத்துக்குள் இது செய்து முடிக்கப்படும் என்ற கேள்விக்கு, முதலில் நான் எனக்கான அலுவலகத்தைத் தேட வேண்டும். பின்னர் இருக்கிற நிலைமை, கிடைக்கிற விவரங்களை வைத்துதான் மற்றவை குறித்து பேச முடியும், என்றார் நிலேகனி.