நேரத்தை வீணடித்த ஏ.சி.முத்தையாவுக்கு அபராதம்!
சென்னை: இந்திய கிரிக்கெட் வாரியச் செயலாளரும், சென்னை ஐபிஎல் சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான சீனிவாசனுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், கோர்ட் நேரத்தை வீணடித்து விட்டதாக தொழிலதிபர் ஏ.சி.முத்தையாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியச் செயலாளராக இருப்பவர் சீனிவாசன். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வாங்க இவர் முடிவு செய்திருந்தபோது அதை எதிர்த்து ஏ.சி.முத்தையா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
முத்தையாவுக்காக மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார்.
அதில், கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கான நடத்தை விதிமுறைகளை மீறும் வகையில், ஐபிஎல் அணியை வாங்க முயல்கிறார் சீனிவாசன்.
கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர், ஐபிஎல் அணியை வாங்க முடியாது. அதற்கு வாரிய சட்டத்தின் 6.2.4 பிரிவு தடுக்கிறது.
எனவே சீனிவாசனின் முயற்சிக்குத் தடை விதிக்க வேண்டும், அவர் செயலாளர் பதவியில் நீடிக்கத் தகுதியவற்றவர் என அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
ஆனால் இடைக்காலத் தடை விதிக்க உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயபால் மறுத்து விட்டார்.
மேலும், கிரிக்கெட் வாரியம், ஐபிஎல் கமிஷனர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதற்குப் பதில் மனு தாக்கல் செய்த கிரிக்கெட் வாரிய வக்கீல் ராமன், தனிப்பட்ட விரோதம் காரணமாக முத்தையா இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இதை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கில் இன்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதில், கிரிக்கெட் வாரிய நிர்வாகியாக இருப்பவர் ஐபிஎல் அணியின் உரிமையாளராகவும் இருக்கலாம். இதை கிரிக்கெட் வாரிய சட்ட விதிகள் எதுவும் தடுக்கவில்லை.
இந்த வழக்கைத் தொடுத்து கோர்ட் நேரத்தை மனுதாரர் ஏ.சி.முத்தையா வீணடித்து விட்டார். எனவே அவர் ரூ. 25,000 அபராதம் கட்ட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.