சென்னையில் அருகே அமையும் 'பைனான்சியல் சிட்டி'!
இந்த நிறுவனங்களுக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளுடன் இந்த நகரம் அமையும்.
இத் தகவலை துணை முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். அவர் கூறுகையில்,
வங்கிகள், பங்கு நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றை சென்னைக்கு ஈர்க்க இத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அவர்களுக்குத் தேவையான அனைத்து வசிதிகளுடன் இந்த நகரம் அமையும். தனியாருடன் இணைந்து இதை அரசு உருவாக்கும்.
அதே போல விமானத் தயாரிப்புத் தொழிற்சாலைகளை தமிழகத்துக்கு ஈர்க்க சிறப்பு வானூர்தி பூங்கா அமைக்கப்படும். இங்கு விமானத் தயாரிப்பு நிறுவனங்களுக்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.
நாட்டிலேயே சென்னையை வானூர்தித் தயாரிப்பின் தலைநகராக்க இந்த பிரமாண்டத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இத் திட்டமும் தனியாருடன் இணைந்து செயல்படுத்தப்படும் என்றார் ஸ்டாலின்.
ஜவுளித்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறுகையில்,
சென்னிமலையில் ரூ.99 லட்சம் செலவில் கைத்தறி ஏற்றுமதி மண்டலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே போல அங்கு மத்திய அரசு திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவு பூங்கா அமைக்கவும் முதல்வரிடம் பேசி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.