இண்டர்நெட் மையங்களில் சோதனை-கமிஷ்னர் அலுவலகம் முற்றுகை
சென்னை: சென்னையில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத இண்டர்நெட் மையங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து இன்டர்நெட் மைய உரிமையாளர்கள் இன்று போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகத்துக்கு ஜெயசீலன் என்ற பெயரில் மிரட்டல் போன் நம்பருடன் கூடிய இ-மெயில் வந்தது. அதில்,
சென்னை விமான நிலையம், துறைமுகம், மற்றும் முக்கியமான கட்டிடங்கள் போன்றவற்றில் குண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் குறி வைத்து தாக்குதலுக்கு திட்ட மிட்டுள்ளோம். எனவே வருகிற 16ம் தேதி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் குண்டுகள் வெடித்து சிதறும். முடிந்தால் தடுத்துப் பாருங்கள். என்னையும் பிடித்துப் பாருங்கள் என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில் வடபழனி பகுதியில் உள்ள சந்தூஸ் என்ற இன்டர்நெட் மையத்திலிருந்து இந்த இ-மெயில் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இ மெயிலில் இருந்த போன் நம்பரை வைத்து சேலத்தில் இருந்த ஜெயசீலன் என்பவரை போலீசார் பிடித்தனர். அவரை சென்னையிலிருந்து இ மெயில் மிரட்டல் வந்த இன்டர்நெட் மையத்துக்கும் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது மிரட்டல் இ மெயிலுக்கும், ஜெயசீலனுக்கும் தொடர்பில்லை என்பதும் அவரை பழி வாங்க யாரோ மிரட்டல் அனுப்பியதும் தெரியவந்தது. இதையடுத்து சந்தூஸ் இன்டர்நெட் மையத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தையடுத்து சென்னையில் ஆயிரக்கணக்கான இன்டர்நெட் மையங்களில் போலீசார் அதிரடி ரெய்ட் நடத்தினர்.
இதில் பெரும்பாலான மையங்களில் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை. மையத்திற்கு வருபவர்கள் பெயர் பதிவேடு சரியாக பராமரிக்கப்படவில்லை. மேலும் விதிகளின்படி கண்காணிப்பு கேமராக்களும் வைக்கவில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து உடனடியாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், மீறினால் அதை மூடவும் உத்தரவிடப்பட்டது.
ஏற்கனவே கால அவகாசம் தரப்பட்டும் கேமராக்கள் பொருத்தாக 3 வடபழனி பகுதி இண்டர்நெட் மையங்களை உடனடியாக மூடவும் போலீசார் உத்தரவிட்டனர். இதையடுத்து அவை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டன.
இதையடுத்து இன்று காலை நூற்றுக்கணக்கான இன்டெர்நெட் மைய உரிமையாளர்கள் போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
சோதனை என்ற பெயரில் தங்களுக்கு போலீசார் அநாவசியமான தொல்லைகள் கொடுப்பதாகவும், நூற்றுக்கும் மேற்பட்ட இன்டர்நெட் மையங்களை போலீசார் மூடியுள்ளதாகவும், பலரை போலீசார் பிடித்துச் சென்றுள்ளதாகவும், தங்களை கிரிமினல்கள் போல நடத்துவதாகவும் அவர்கள் புகார் கூறினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.